சாதிக்க உதவிய கிண்டல் - ஸ்ரீசாந்த்

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் என்னுடைய சிறப்பான செயல்பாட்டிற்கு, இங்குள்ள ரசிகர்கள் என்னைப் பார்த்து கிண்டல் செய்தது தான் காரணம்,'' என, இந்திய வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, நாட்டிங்காமில் நடக்கிறது. இதில் இயான் பெல் அடித்த பந்து, தரையில் பட்டதை கவனிக்காத ஸ்ரீசாந்த், பிடித்து விட்டதாக நினைத்து "அவுட்' கேட்டார். அப்போது ரசிகர்கள் கூட்டம் ஸ்ரீசாந்தை கடுப்பேற்றியது.

இதேபோல, பிரையர் அவுட்டான போது, "சீட்டிங்', "சீட்டிங்' என்று குரல் எழுப்பினர். இருப்பினும், இதைக் கண்டு கொள்ளாத இவர், முதல் இன்னிங்சில் அபாரமாக பந்துவீசி, 3 விக்கெட் கைப்பற்றினார்.


இது குறித்து ஸ்ரீசாந்த் கூறியது:

நீண்ட நாள் போட்டியில் பங்கேற்காமல் இருந்த நான், முதல் போட்டியிலேயே இந்தளவு சாதிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. இதற்கு காரணம் அணியில் என்னுடைய இடத்தை நிரந்தரமாக தக்க வைத்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமும், இங்குள்ள ரசிகர்கள் என்னை கேலி செய்ததும் தான்.

ஜாகிர்கானுக்கு பதிலாக, அணியில் இடம் பெற்றுள்ளேன். "டிரன்ட் பிரட்ஜ்' மைதானத்திற்கு ஏற்ப எப்படி பந்துவீச வேண்டும் என்பது குறித்த நுணுக்கங்களை அவரிடம் இருந்து விரைவாக கற்று கொண்டேன். இதனால் தான் சாதிக்க முடிந்தது. தவிர, பீட்டர்சன் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு மேலோங்கி இருந்தது.

பவுன்சர் பந்துகளை சந்திப்பதில் பலவீனமாக இருக்கும் இவரை, அதே முறையில் செயல்பட்டு வீழ்த்த வேண்டும் என முடிவு செய்தோம். அதன் படியே, திட்டமிட்டது பலனை தந்தது. இவருடைய விக்கெட்டை நான் எடுப்பேன் என நினைக்க வில்லை. மொத்தத்தில் கடந்த போட்டியில் இரட்டை சதம் அடித்த பீட்டர்சன், சதம் கடந்த பிரையர் ஆகியோரை வீழ்த்தியது அதிக மகிழ்ச்சி தருகிறது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியை குறைவான ரன்களுக்கு கட்டுப்படுத்தி இருக்கலாம். ஆனால் பிராட், சுவான் சிறப்பாக செயல்பட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

பிராட்டை வீழ்த்துவதற்கு இரண்டு, மூன்று சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும், அதனை தவறவிட்டது தவறாகி போனது. "டிரன்ட் பிரிட்ஜ்' மைதானம் உண்மையிலேயே பவுலர்களுக்கு சாதகமானது. இதற்காக சாதாரணமாக பந்துவீசினால் அது பயன் தராது.

இவ்வாறு ஸ்ரீசாந்த் கூறினார்.

0 comments:

Post a Comment