தோனியின் "பேட்' ரூ.72 லட்சம்

உலக கோப்பை பைனலில் இலங்கைக்கு எதிரான போட்டியில் தோனி பயன்படுத்திய "பேட்' ரூ. 72 லட்சத்துக்கு ஏலம் போனது.

இந்திய அணி கேப்டன் தோனி, கடந்த ஆண்டு "வின்னிங் வேய்ஸ் டுடே பார் டுமாரோ' என்ற பெயரில் அறக்கட்டளை துவங்கினார். இதற்கு நிதி சேர்க்கும் விதத்தில், கடந்த உலக கோப்பை பைனலில், இலங்கைக்கு எதிராக 91 ரன்கள் சேர்க்க உதவிய "பேட்' உட்பட பல பொருட்கள் ஏலம் விடப்பட்டன.

தோனியின் "பேட்' மட்டும் ரூ. 72 லட்சத்துக்கு ஏலம் போனது. தோனி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பை வென்றது, சிறந்த வீரர் சச்சின் சாதனைகளை குறிக்கும் வகையில், உலகின் பிரபல ஓவியர் சச்சா ஜாப்ரி வரைந்த ஓவியம் ஏலத்தில் விடப்பட்டது.

இதேபோல, முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பாண்டிங், ஆன்ட்ரூ பிளின்டாப், ஆலன் பார்டர், மலிங்கா ஆகியோர் வரைந்த ஓவியம், கையெழுத்திட்ட பொருட்களும் ஏலத்தில் விடப்பட்டன. இதன் மூலம் மொத்தம் ரூ. 3.25 கோடி வசூலானது. ஏலம் குறித்து தோனி கூறியது:

எனது அறக்கட்டளை கடந்த ஆண்டு, மார்ச் மாதம் இந்தியாவில் துவங்கப்பட்டது. தற்போதைய ஏலத்தில் கிடைத்துள்ள நிதியை, சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள சிறுவர்களின், கிரிக்கெட் திறனை வளர்க்க பயன்படுத்தப் போகிறேன்.

தவிர, ராஞ்சியில் புதிய விளையாட்டு அகாடமி ஒன்றை துவங்க போகிறேன். இதற்காக ஜார்க்கண்ட் அரசு போதிய நிலத்தை ஏற்கனவே ஒதுக்கியுள்ளது. இதன் மூலம், வசதியில்லாத சிறுவர்களின் திறமைகளை பட்டை தீட்டி, அவர்களது திறமைகளை வெளிப்படுத்த உதவ உள்ளேன்.

இந்த அகாடமியில் பயிலும் மாணவர்கள், ஊழியர்கள் தங்குவதற்கு ஏற்ப, அருகில் வீடு கட்டவும் திட்டமிட்டுள்ளேன்.

என்னுடைய 18 வயதில் (1999-2000) பொதுத்துறை நிறுவனத்தின் சார்பில், 3 பந்துகள், கிரிக்கெட் பேட், பேடுகளை வழங்கியது. இதன் பின் அடுத்த நான்கு ஆண்டில், எனது கிரிக்கெட் திறமையில் வியக்கத்தக்க மாற்றம் ஏற்பட்டது. இவ்வாறு தோனி கூறினார்.


அடுத்த இலக்கு:

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹர்பஜன் சிங் கூறுகையில்,"" சமீபத்தில் நடந்த உலக கோப்பை தொடர் அரையிறுதியில், பாகிஸ்தானை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது, எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்.

தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட் வீழ்த்தியுள்ளேன். விரைவில் மேலும் 400 விக்கெட்டுகளை வீழ்த்துவேன் என்ற நம்பிக்கையுள்ளது,'' என்றார்.

0 comments:

Post a Comment