பிளட்சர் புதிய சாதனை

இந்திய அணியின் பயிற்சியாளர் டங்கன் பிளட்சர், டெஸ்ட் அரங்கில் 100 போட்டிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றி புதிய சாதனை படைத்தார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டி, இந்திய அணியின் பயிற்சியாளர் டங்கன் பிளட்சர், பயிற்சியாளராக செயல்படும் 100வது டெஸ்ட் போட்டி.

இதன்மூலம் இவர், டெஸ்ட் அரங்கில் 100 போட்டிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றிய முதல் பயிற்சியாளர் என்ற புதிய சாதனை படைத்தார்.

உலக கோப்பை தொடருக்கு பின், இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கேறி கிறிஸ்டன் விலகினார். இதனால் ஜிம்பாப்வேயின் டங்கன் பிளட்சர், இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

கடந்த 1999ல் இங்கிலாந்து அணியின் முதலாவது வெளிநாட்டு பயிற்சியாளராக காலடி வைத்த இவர், 96 டெஸ்ட் போட்டிகளுக்கு பயிற்சியாளராக செயல்பட்டார். இவரது பயிற்சியில், 2004ல் இங்கிலாந்து அணி தொடர்ந்து எட்டு டெஸ்டில் வெற்றி பெற்று அசத்தியது. கடந்த 2005ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

சுமார் எட்டு ஆண்டுகள் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட இவர், நிறைய வெற்றிகளை பெற்றுத்தந்தார். சமீபத்தில் இவரது பயிற்சியின் கீழ், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

இதுகுறித்து டிராவிட், லட்சுமண் உள்ளிட்ட இந்திய வீரர்கள் கூறுகையில், ""இந்திய அணியின் பயிற்சியாளராக பிளட்சர் நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் அமைதியாக காணப்படும் இவர், கிரிக்கெட் குறித்த நிறைய விஷயங்களை தெரிந்துள்ளார்.

அனுபவம் வாய்ந்த இவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும். இதன்மூலம் சிறந்த வீரராக வலம் வர வாய்ப்புள்ளது. இவரது வருகை இந்திய அணிக்கு கிடைத்த மிகப் பெரிய பலம்,'' என்றனர்.

0 comments:

Post a Comment