சச்சினுக்கு தலைவணங்கும் ஸ்டிராஸ்

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 100வது சதம் அடிப்பதை தலைவணங்கி வரவேற்கிறேன். சர்வதேச டெஸ்ட் அணிகள் தரவரிசையில் முதலிடத்தை பிடிக்க, இந்திய அணியின் சவாலை சந்திக்கத் தயாராக உள்ளோம்,'' என, இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டிராஸ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரில் இந்திய அணியின் "சீனியர்' சச்சின், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 100வது சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஸ்டிராஸ் கூறியது:

எந்த ஒரு தொடராக இருந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் சச்சின் தான், எங்களுக்கு முன்மாதிரி. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட்டில் நீடித்து இருக்கும் இவர், எங்களுக்கு எதிரான தொடரில் நிச்சயம் சாதிப்பார் என்று நம்புகிறேன். இங்கு சச்சின் 100வது சதம் அடிப்பதை வரவேற்கிறேன்.

இது உண்மையில் வியக்கத்தக்க சாதனை. இந்த இலக்கை எட்டியது மட்டுமல்லாமல், இவர் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் நீடித்திருக்க விரும்புகிறார். எவ்வித நெருக்கடியான நிலையிலும், மனவலிமை உதவியுடன் பேட்டிங்கில் மீண்டு விடுவார். மிகவும் பணிவான குணமுடைய சச்சின், மற்றவர்களிடமும் மரியாதை காட்டுவார்.

"நம்பர்-1' இடம்:

டெஸ்ட் அரங்கில் "நம்பர்-1' இடத்தில் உள்ள இந்திய அணி, கடந்த சில ஆண்டுகளாக வெற்றி, தோல்வி கலந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வருகிறது. தற்போதைய பயிற்சியாளர் டங்கன் பிளட்சர், இதற்கு முன் இங்கிலாந்து அணிக்காக செயல் பட்டுள்ளார். இப்போது இந்திய அணிக்கு பயிற்சி தரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் எங்களது பலம், பலவீனங்கள் நன்கு தெரியும்.

சொந்தமண் பலம்:

இருப்பினும், ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இந்திய அணியை முந்துவது என்பது கடினம். இந்நிலையில் இந்திய அணியின் சவாலை சந்திப்பது, முதலிடத்தை பெறவுள்ள எங்களை, சிறப்பான அணியாக மாற்றும். தவிர, சொந்தமண் பலமும் எங்களுக்கு சாதகமாக இருக்கும்.

எங்களைப் பொறுத்தவரையில், "நம்பர்-1' இடத்தை பெறுவது தான் எங்கள் லட்சியம். இதைத்தான் வீரர்கள் எப்போதும் சொல்லிக்கொண்டு இருப்பார்கள். அதேநேரம் இந்த "ரேங்க்' குறித்து அதிகம் கவலைப்படாமல், தொடர்ந்து சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தினோம்.

கவலை இல்லை:

தற்போது இதற்கான வாய்ப்பு கூடி வந்துள்ளது. இத்தொடரில் இந்தியாவை வென்று, "நம்பர்-1' இடத்தை பெற்றால், மிகச்சிறப்பாக இருக்கும். ஒரே அணியாக அசத்தும் எங்களுக்கு இது அபாரமான முன்னேற்றம். ஆனால் இத்துடன் வேலை முடிந்து விட்டது என்று சொல்லமுடியாது. ஏனெனில், இது போன்ற எண்ணங்கள் எப்போதும் அபாயமானது.

மற்றபடி தொடரின் முடிவில் எது நடந்தாலும் கவலையில்லை. கடந்த 6 முதல் 12 மாதங்களாக முயற்சித்து வந்த எங்கள் லட்சியத்தை, மீண்டும் தொடருவோம். ஏனெனில் இந்த சவால் எப்படிப்பட்டது என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

டிரம்லட் தொல்லை:

இந்திய துணைக்கண்டத்து அணிகள் கடந்த சில ஆண்டுகளாக "ஷார்ட் பிட்ச்' பந்துகளை நன்கு சமாளிக்க கற்றுக்கொண்டு விட்டனர். இத்தொடரிலும் அணியின் சீனியர் வீரர்களுக்கு, இது ஒரு தொல்லையாக இருக்காது என்பது உறுதி.

மற்றபடி, இந்திய அணியினருக்கு குறிப்பிடத்தக்க வகையில் எந்த பலவீனமும் இருப்பதாக தெரியவில்லை. இருப்பினும், கடந்த முறை டிரம்லட் இந்திய அணிக்கு பெரிதும் சிரமம் கொடுத்தார். இப்போது நல்ல அனுபவம் பெற்ற நிலையில், தொடர்ந்து அசத்துவார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு ஸ்டிராஸ் கூறினார்.

1 comments: