நோ-பாலில் அவுட்டான தோனி

பார்படாஸ் டெஸ்டில் இந்திய கேப்டன் தோனி, "நோ-பாலில்' அவுட்டானது தெரியவந்துள்ளது. இதற்கு "டிவி ரீப்ளேயில்' நேர்ந்த தவறு தான் காரணம் என்பது அம்பலமாகியுள்ளது.

இந்தியா அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க, வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதில், இந்திய அணிக்கு எதிராக தீர்ப்புகள் வழங்கப்பட்டன. விராத் கோஹ்லி (பந்து இடுப்பில் பட்டது), ரெய்னா (பந்து பேட்டில் படவில்லை), கேப்டன் தோனி ("நோ-பாலில்' அவுட்) ஆகியோருக்கு தவறான அவுட் கொடுக்கப்பட்டது.


மீண்டும் மோசம்:

தற்போது இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட், பார்படாசில் நடக்கிறது. இதன் முதல் இன்னிங்சில் இந்திய அணி 38 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்நிலையில் இணைந்த லட்சுமண், ரெய்னா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அப்போது 53 ரன்கள் எடுத்திருந்த ரெய்னாவுக்கு, பந்து தொடையில் பட்ட நிலையில் தவறாக "அவுட்' கொடுக்கப்பட்டது.


சந்தேகத்துக்குரிய "அவுட்':

இப்போட்டியின் 59வது ஓவரின் கடைசி பந்தை எட்வர்ட்ஸ் வீசினார். இதை தோனி (2 ரன்) "மிட் ஆன்' திசையில் தூக்கி அடித்தார். அதை அங்கு நின்றிருந்த சந்தர்பால் "கேட்ச்' செய்தார். இருப்பினும் எட்வர்ட்ஸ் வீசிய பந்து "நோ-பாலாக' இருக்கலாம் என்று, அம்பயர் இயான் கோல்டு சந்தேகப்பட்டார்.


"ரீப்ளேயில்' தவறு:

இதனால், தோனியை சற்று நிற்கச் சொல்லிவிட்டு, "டிவி' அம்பயரிடம் முறையிட்டார். இங்கு தான் தவறு ஏற்பட்டுள்ளது. அதாவது எட்வர்ட்ஸ் வீசிய சந்தேகத்துக்குரிய பந்தை "ரீப்ளே' செய்து பார்க்காமல், வேறொரு பந்துவீச்சை "ரீப்ளே'யில் காண்பித்துள்ளனர். அதில், எட்வர்ட்ஸ் "கிரீசுக்கு' வெளியே கால் வைக்கவில்லை. இதன்படி தோனிக்கு "அவுட்' தரப்பட்டது.

உண்மையில் தோனி அவுட்டான பந்து, "நோ-பால்' தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்த தவறுக்கு "ரீப்ளே' ஒளிபரப்பியவரே காரணம். இவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தோனி வெளியேறிய சிறிது நேரத்தில், பேட்டிங்கில் மற்றவர்களும் சொதப்ப, இந்திய அணி 201 ரன்னுக்கு ஆல் அவுட்டானாது. ஏற்கனவே "டி.ஆர்.எஸ்.,' முறை இல்லாமல், இந்திய அணி அதிகமாக பாதிக்கப்பட்டு கொண்டுள்ளது. இந்நிலையில் "ரீப்ளே' ஒளிபரப்பு செய்பவர்களும், தங்கள் பங்குக்கு இந்திய அணியை சோதிக்க துவங்கியுள்ளது, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


மழையால் ஆட்டம் பாதிப்பு

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாவது நாள் ஆட்டம் பெரும்பாலும் மழையால் பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மொத்தம் 25.3 ஓவர்கள் மட்டும் தான் வீசப்பட்டது. மழையால் போட்டி நிறுத்தப்பட்ட போது, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்து, 103 ரன்கள் பின் தங்கியிருந்தது.

0 comments:

Post a Comment