விளையாட்டு நிர்வாகத்தில் அரசியல்வாதிகள்

விளையாட்டு நிர்வாகத்தில் அரசியல்வாதிகள் இடம் பெறுவது மிகவும் அவசியமானது,'' என, மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட், ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு அமைப்புகளின் தலைவர்களாக அரசியல்வாதிகள் உள்ளனர். இதற்கு, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விளையாட்டு நிர்வாகத்தில் வீரர்களே இடம் பெற வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.

இந்தச் சூழலில் மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தலில் முன்னாள் கேப்டன் வெங்சர்க்கார், காங்., கட்சியை சேர்ந்த விலாஸ் ராவ் தேஷ்முக்கிடம் தோல்வி அடைந்தார். இதையடுத்து அரசியல்வாதிகளுக்கு மீண்டும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லா கூறியது:

விளையாட்டு நிர்வாகத்தில் இருந்து அரசியல்வாதிகள் விலகி விட்டால், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள இயலாது. இவர்களிடம் தான் வளர்ச்சிக்கான வழியை காட்டும் சாவி உள்ளது. முன்னாள் வீரர்களால் திட்டங்களை நிறைவேற்ற முடியாது. எனவே, விளையாட்டு அமைப்புகளில் அரசியல்வாதிகள் இடம் பெறுவது மிகவும் அவசியமானது.

காஷ்மீர் கிரிக்கெட் சங்க தலைவராக உள்ள நான் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறேன். இங்கு சர்வதேச தரம் வாய்ந்த இரண்டு கிரிக்கெட் மைதானங்கள் அமைய உள்ளன. ஜம்மு மைதானத்துக்கு செல்லும் பாதையை அமைக்க, ராணுவத்தின் உதவியை நாட உள்ளோம்.

எனது எம்.பி., நிதி ஒதுக்கீட்டில் இருந்து 1.40 கோடி ரூபாயை எஸ்.பி. கல்லூரி மைதானத்தை மேம்படுத்துவதற்கு வழங்க உள்ளேன். இதன் மூலம் ஸ்ரீநகரில் உள்ள இளைஞர்கள் பெரிதும் பயனடைவர். வாசிர் பாக் பகுதியில் உள்ள அமர் சிங் கல்லூரி மைதானத்துக்கு கூடுதல் வசதிகள் செய்திட, 30 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.

இவ்வாறு பரூக் அப்துல்லா கூறினார்.

பேடி "பல்டி'

மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தலில் வெங்சர்க்கார் தோல்வி அடைந்ததும், அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சித்தார் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் பிஷன் சிங் பேடி. தற்போது காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள இவர், தனது கருத்தை மறுத்துள்ளார்.

இது குறித்து இவர் கூறுகையில்,""விளையாட்டு அமைப்புகளில் அரசியல்வாதிகள் இடம் பெறுவது பற்றி நான் கருத்து எதுவும் கூறவில்லை,''என்று, நழுவினார்.

0 comments:

Post a Comment