சேவக் இடத்தை நிரப்புவது கடினம்

சேவக் இடத்தை பூர்த்தி செய்வது மிகவும் கடினம்,'' என, இளம் இந்திய துவக்க வீரர் அபினவ் முகுந்த் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 196 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இப்போட்டியில் தோள்பட்டை காயம் காரணமாக, இந்திய அதிரடி துவக்க வீரர் சேவக் பங்கேற்கவில்லை. இதனால் இளம் வீரர் அபினவ் முகுந்த், துவக்க வீரராக களமிறக்கப்பட்டார்.

இதுகுறித்து அபினவ் முகுந்த் கூறியதாவது: லார்ட்ஸ் டெஸ்டில் விளையாட வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தோள்பட்டை காயம் காரணமாக நட்சத்திர வீரர் சேவக் விளையாடாததால், துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சேவக் இடத்தை நிரப்புவது எளிதான காரியமல்ல.

இவரது அதிரடி ஆட்டத்தை கண்டு அஞ்சாத பவுலர்களே கிடையாது. எனவே இவருடன் என்னை ஒப்பிட்டு பார்க்க விரும்பவில்லை. எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். இப்போட்டியில் பெரிய அளவில் சாதிக்காதது ஏமாற்றமாக இருந்தது.

ஆனால் எனது பேட்டிங், திருப்தி அளித்தது. எனவே வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுக்க போராடுவேன்.

இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய விஷயம். இந்திய அணியினரோடு தினமும் பயிற்சி மேற்கொள்ளும் போது, நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடிகிறது. சச்சின் உள்ளிட்ட சீனியர் வீரர் பேட்டிங் குறித்த நிறைய விஷயங்களை கற்றுக் கொடுக்கின்றனர். இது போட்டியில் சாதிப்போம் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.

காயம் காரணமாக ஜாகிர் கான் வெளியேறியது பின்னடைவாக அமைந்தது. இருப்பினும் இஷாந்த் சர்மா, பிரவீண் குமார் உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளர் இருந்திருந்தால், லார்ட்ஸ் டெஸ்டில் எளிதாக வெற்றி பெற்றிருக்கலாம்.

இரண்டாவது டெஸ்டில் ஸ்ரீசாந்த் விளையாட இருப்பது வரவேற்கத்தக்கது. இவர், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் நெருக்கடி அளிப்பார் என எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு அபினவ் முகுந்த் கூறினார்.

0 comments:

Post a Comment