உலக கோப்பை தொடரில் சூதாட்டம்

உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வேக்கு இடையிலான போட்டியில் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஐ.சி.சி., விசாரணையில் ஈடுபட்டுள்ளது. தவிர, இந்தியா, இங்கிலாந்து இடையிலான போட்டி "டை' ஆகும் என்று வார்ன் எப்படி கணித்தார் என்றும் கேள்வி எழுந்துள்ளது.


லார்ட்ஸ் டெஸ்டில் "ஸ்பாட் பிக்சிங்கில்' ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட் (10 ஆண்டு), முகமது ஆசிப் (7 ஆண்டு), முகமது ஆமிர் (5 ஆண்டு) ஆகியோருக்கு சமீபத்தில் தான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) தண்டனை கொடுத்தது.

இதனால் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை ஐ.சி.சி., தீவிரமாக கண்காணித்து வருகிறது. இருப்பினும், கிரிக்கெட் உலகை சூதாட்டத்தின் நிழல் மீண்டும் படர்ந்துள்ளது போலத் தோன்றுகிறது.

கடந்த பிப். 25ல் ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வேக்கு இடையிலான லீக் போட்டி ஆமதாபாத்தில் நடந்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன், ஹாடின் இணைந்து முதலில் மந்தமான துவக்கம் கொடுத்தனர். முதல் 11 ஓவரில் 28 ரன்கள் தான் எடுத்தனர்.

15 ஓவரின் முடிவில் 53 ரன்கள் எடுத்தனர். தவிர, முதல் 2 ஓவரில் 5 ரன் மட்டுமே எடுத்தது, ஐ.சி.சி.,க்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஐ.சி.சி., ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழுவினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் இதனை ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டிம் நீல்சன் மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில்,"" எல்லோரும் வாட்சன், ஹாடின் மெதுவாக விளையாடியது குறித்து தான் பேசுகின்றனர். என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் நன்றாகத்தான் விளையாடினர்.

ஜிம்பாப்வே அணியினர் துவக்கத்தில் சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியதால், விக்கெட்டுகளை பாதுகாக்க வேண்டியது இருந்தது. எங்களைப் பொறுத்தவரையில் சரியாகத்தான் விளையாடினோம்,'' என்றார்.


வார்னுக்கு சிக்கல்:

அதேநேரம் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி "டை' ஆகும் என, ஏழு மணி நேரம் முன்னதாக, ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய வீரர் வார்ன், கணித்ததும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதை இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் பாராட்டினாலும், பல்வேறு தரப்பில் இருந்து சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனெனில் ஒருவர் கணிக்கும் போது, யாராவது ஒருவர் வெற்றி பெறுவார்கள் என்று தான் கூறமுடியும். மாறாக வார்ன் மட்டும், "டை' ஆகும் என்று எப்படி சொன்னார் என்பது, பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.


அமிர் சொகைல் எதிர்ப்பு:

சூதாட்ட சந்தேகம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அமிர் சொகைல் கூறுகையில்,"" போட்டி "டை' ஆகும் என, இந்தியா அல்லது பாகிஸ்தான் வீரர்கள் யாராவது தெரிவித்து இருந்தால், இந்நேரம் மேற்கு நாடுகளின் "மீடியா' பெரிய அளவில் விவாதித்து, குதித்திருக்கும். ஆனால், சொன்னது ஆஸ்திரேலியா வீரர் என்றவுடன் "ஜீனியஸ்' என்கிறார்கள்,'' என்றார்.

0 comments:

Post a Comment