இந்திய அணியில் அஸ்வின், ரெய்னா?

உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் இவர்கள் இருவரும் களம் இறக்கப்படலாம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் அடைந்த தோல்வியால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. யூசுப் பதானுக்குப் பதிலாக ரெய்னாவும், வேகப்பந்து வீச்சாளர்கள் நெஹ்ரா, அல்லது முனாஃப் படேலுக்குப் பதிலாக அஸ்வினும் அணியில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ரெய்னா சிறந்த ஆல் ரவுண்டர். எந்த இடத்தில் களம் இறக்கினாலும் அதற்கு ஏற்ப ஆடக் கூடியவர். பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்படும் அவரை, தேவைக்கு ஏற்ப பந்து வீசவும் பயன்படுத்தலாம் என்று அணி நிர்வாகம் கருதுவதாகத் தெரிகிறது.


முன்னதாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் அடைந்த தோல்விக்குப் பின், இந்திய அணியின் நடுவரிசை, பின் வரிசை பேட்டிங், பந்து வீச்சு கடும் விமர்சனத்துக்குள்ளானது.

தொடக்க வீரர்கள் சச்சின், சேவாக், கம்பீர் ஆகியோர் சிறப்பாக ஆடி வலுவான தொடக்கம் அளித்த போதிலும் அடுத்து வந்த வீரர்களின் மோசமான ஆட்டத்தால் இந்திய அணி 296 ரன்களே எடுக்க முடிந்தது.

அதே நேரத்தில் பந்து வீச்சும் குறிப்பிடும்படி இல்லாததால் இந்திய அணி தோல்வியடைந்துவிட்டது.

0 comments:

Post a Comment