காலிறுதிக்கு சேவக் தயார்

உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான, காலிறுதி போட்டியில் பங்கேற்க சேவக் தயாராகியுள்ளார்.

நாளை நடக்கும் இரண்டாவது போட்டியில் இந்திய அணி, "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. இதில் சாதிக்க வேண்டும் என்று இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய வீரர்கள் யுவராஜ் சிங், ஸ்ரீசாந்த் இருவரும் நேற்றைய பயிற்சியில் பங்கேற்க வில்லை. மற்ற அனைத்து இந்திய வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர். இவர்கள், பந்தை எறிதல், உடற்பயிற்சி, மனவலிமை பயிற்சிகளை மேற்கொண்டனர். பின் வலைப்பயிற்சியும் மேற்கொண்டனர்.

கேப்டன் தோனி, சச்சின் இருவரும் நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சி செய்தனர். இத்தொடரின் துவக்கத்தில் இருந்தே, முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்தார் சேவக். இந்த தொல்லையிலிருந்து விடுபட, லீக் போட்டிகள் நடந்து கொண்டிருந்த போது, அவ்வப்போது டில்லி சென்று, தனது "பிசியோதெரபிஸ்ட்டை' சந்தித்து, தேவையான ஆலோசனைகள் பெற்று வந்தார்.

இதனால் தான் கடந்த வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான லீக் போட்டியில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் நாளைய போட்டியில் சேவக் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் நேற்று கிறிஸ்டன் முன்னிலையில், சேவக் எவ்வித சிக்கலும் இன்றி பயிற்சி செய்தார்.

இதுகுறித்து இந்திய அணி மானேஜர் ரஞ்சிப் பிஸ்வால் கூறுகையில்,"" அனைத்து வீரர்களும் சரியான உடற்தகுதியுடன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு தயாராக உள்ளனர்,'' என்றார்.

சேவக் களமிறங்குவதை அடுத்து ரெய்னா அல்லது யூசுப் பதான் இருவரில் ஒருவர் அவருக்கு வழிவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment