உலக கோப்பை தொடருக்கு சிக்கல்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போது, அல்-கொய்தா, லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தலாம் என, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பெரும்பாலான போட்டிகள் இந்தியாவில் நடக்க உள்ளன. இப்போட்டிகளின் போது தாக்குதல் நடத்த அல்-கொய்தா, லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதுதொடர்பாக மத்திய புலனாய்வு இயக்குனர், அனைத்து கடலோர மாநில உள்துறைச் செயலர், டி.ஜி.பி.,க்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.


இதில் கூறப்பட்டு இருப்பதாவது:

உலக கோப்பை தொடர் நடந்து கொண்டிருக்கும் போது, அல்-கொய்தா, லஷ்கர்- இ- தொய்பா போன்ற பயங்கரவாதிகள் இயக்கம், அடுத்த சில வாரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கு புனே, ஜெர்மனி பேக்கரியில் தாக்குதல் நடத்திய ஜபைடுதீன் அன்சாரி மற்றும் அவரது சகாக்கள் இணைந்து திட்டம் தீட்டியுள்ளனர்.


மும்பை மாதிரி:

இந்த தாக்குதலை 26/11 மும்பை சம்பவம் போல, நடத்துவார்கள் என்று தெரிகிறது. இதில் ஈடுபட உள்ள பயங்கரவாதிகள் சிலர், ஏற்கனவே இந்தியாவுக்குள் புகுந்து விட்டனர். மேலும் சிலர் இங்கு வருவதற்கு நேரம் பார்த்துக்கொண்டுள்ளனர்.

இதனால் அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, எவ்வித மோசமான சம்பவமும் நடந்து விடாமல், தடுக்கும் வழிகளில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல் மிரட்டல் காரணமாக, ஏற்கனவே போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) செய்தித் தொடர்பாளர் ராஜீவ் சுக்லா கூறுகையில்,"" பயங்கரவாத மிரட்டல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு வருகிறோம்.

தவிர, மாநில அரசுகளுடன், உள்ளூர் நிர்வாகங்கள் இணைந்து, வீரர்கள், நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்,'' என்றார்.

0 comments:

Post a Comment