சர்ச்சையைக் கிளப்பும் விதிமுறை

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆட்டங்களுக்கு இணையாக பரபரப்பாக பேசப்படுவது யூடிஆர்எஸ் (Umpire Decision Review System) எனப்படும் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் முறை.


மைதானத்தில் உள்ள நடுவர் அவுட் கொடுத்தாலும், சந்தேகத்தின் பேரில் அதனை எதிர்த்து முறையீடு செய்ய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதே இந்த முறையின் சிறப்பு அம்சம். இது முழுக்க முழுக்க வீரர்களுக்கு சாதகமான அம்சம் என்றாலும், கேப்டன் தோனி, யுவராஜ் உள்பட பல வீரர்கள் இந்த முறை குழப்பத்தை ஏற்படுத்துவதாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.


அதே நேரத்தில் இதற்கு வீரர்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்துள்ளது. யூடிஆர்எஸ் மூலம் முறையீடு செய்வதற்கான எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென பாகிஸ்தான் அணி கேப்டன் அப்ரிதி கோரிக்கை விடுத்துள்ளார். நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி, தென் ஆப்பிரிக்கா கேப்டன் ஸ்மித், ஜிம்பாப்வே கேப்டன் சிகும்புரா உள்ளிட்டோரும் யூடிஆர்எஸ் முறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.


இந்த முறை, கத்தில் இருக்கும் நடுவர்களின் அதிகாரத்தை குறைக்கும் என்பதால் நடுவர் மத்தியில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.


இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அந்த அணி வீரர் பீட்டர்சனுக்கு யூடிஆர்எஸ் முறை மூலம் அவுட் கேட்டும் அது கிடைக்காததால், நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சம்பளத்தின் பெரும்பகுதியை அபராதத்தால் இழந்தார் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்.


மனிதத் தவறுகளை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நீக்க முடியும். இதனை அடிப்படையாகக் கொண்டதுதான் யூடிஆர்எஸ். இந்த முறை மூலம் களத்தில் இருக்கும் ஒரு பேட்ஸ்மேனுக்கு நடுவர் அவுட் கொடுக்கும்போது, அதில் சந்தேகம் இருந்தால் அந்த வீரர் 3-வது நடுவரை அணுகமுடியும்.


அதே போல ஒரு வீரர் அவுட் இல்லை என்று நடுவர் அறிவித்தால், அதனை எதிர்த்து பீல்டிங் செய்யும் அணியினர் மூன்றாவது நடுவரிடம் முறையீடு செய்ய முடியும். அவர் விடியோ மூலம் மீண்டும் ஆய்வு செய்து தனது முடிவை வழங்குவார். இரு அணி வீரர்களுமே நடுவரின் தீர்ப்பை எதிர்த்து இரண்டு முறை முறையீடு செய்ய முடியும்.

அவர்களது முறையீடு சரியாக இருந்து ஏற்கப்பட்டால் அவர்களுக்கான இரண்டு வாய்ப்புகளும் அப்படியே இருக்கும். முறையீடு தவறாக இருந்தால், ஒவ்வொரு முறையீடுக்கும் ஒரு வாய்ப்பு கழித்துக் கொள்ளப்படும்.


முக்கியமாக எல்பிடபிள்யூ, ரன் அவுட், ஸ்டம்பிங் ஆகிய முறையில் அவுட் செய்யப்படும்போது ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்பதே இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம்.


முன்பெல்லாம் மைதானத்தில் இருக்கும் நடுவர் அவுட் கொடுத்துவிட்டால், அது தவறு என்றாலும் பேட்ஸ்மேன்கள் அதனை ஏற்றுக் கொண்டு கண்டிப்பாக வெளியேற வேண்டும். இப்படி பலமுறை நடுவரின் தவறான முடிவால் ஆட்டமிழந்த வீரர்கள் ஏராளம். அதே நேரத்தில் பேட்ஸ்மேன் அவுட் ஆகியிருந்தும், நடுவரால் அவுட் இல்லை என அறிவிக்கப்படும்போது, பீல்டிங் செய்யும் வீரர்களுக்கு கடும் எரிச்சல் ஏற்பட்டு வந்தது. ஆனால் இப்போது வீரர்கள் தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளும் வகையில் இந்த முறை அமலில் உள்ளது.


பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு முதன்முறையாக 2009 நவம்பர் 24-ம் தேதி நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது.


அதன்பிறகு இம்முறை சில நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களின் ஒப்புதலோடு பயன்படுத்தப்பட்டபோதும், ஒருநாள் போட்டியில் முதன்முறையாக 2011 ஜனவரியில் தான் (ஆஸ்திரேலியா-இங்கிலாந்துக்கு இடையிலான தொடர்) இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டது.


பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் 2011 உலகக் கோப்பையில் யூடிஆர்எஸ் முறை கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என அறிவித்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). உலகக் கோப்பையில் அமல்படுத்தப்பட்ட பின் ஒன்றிரண்டு ஆட்டங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது.


பெங்களூரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதன்முறையாக சர்ச்சைக்குள்ளானது இந்த யூடிஆர்எஸ் முறை. இயன் பெல்லுக்கு எல்டபிள்யூ முறையில் அவுட் கேட்டு யூடிஆர்எஸ் மூலம் மூன்றாவது நடுவரை அணுகியது இந்திய அணி. டி.வி. ரீபிளேயில் பந்து ஸ்டம்பை தாக்குவது உறுதிசெய்யப்பட்டபோதும், அவருக்கு அவுட் கொடுக்கப்படவில்லை. இதனால் ஏற்கெனவே இந்த முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்த கேப்டன் தோனி அதன்பின் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.


ஸ்டம்புக்கும், இயன் பெல் நின்ற இடத்துக்கும் இடையிலான தூரம் 2.5 மீட்டராக இருந்ததாலேயே அவருக்கு அவுட் கொடுக்கப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. அவருக்கு அவுட் கொடுக்கப்படாதது, ஆட்டத்தின் போக்கையே மாற்றியது, இந்தியா- இங்கிலாந்து இடையிலான அந்த ஆட்டம் "டை'யில் முடிந்தது.


இதனால் யூடிஆர்எஸ் முறை குறித்து தோனி தனது அதிருப்தியைத் தெரிவித்தார். இதற்கு ஐசிசி உடனடியாக பதிலடி கொடுத்தது. யூடிஆர்எஸ் விதிமுறைகளை தோனி சரியாகப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஐசிசி கூறியது. இதையடுத்து தோனிக்கு ஆதரவாக களம் இறங்கிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), ஐசிசி-க்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்தது.


இதனிடையே யூடிஆர்எஸ் விதியில் எல்பிடபிள்யூ முறையில் திடீரென மாற்றம் செய்துள்ளது ஐசிசி. இதுவரை ஸ்டெம்புக்கும் பேட்ஸ்மேன் பந்தை காலில் வாங்கும் இடத்துக்குமானதூரம் 2.5 மீட்டர் தூரம் என்று இருந்ததை 3.5 மீட்டர் என அதிகரித்துள்ளனர். இந்த மாற்றத்தின் பின்னணி என்ன என்பதும் தெரியவில்லை. கிரிக்கெட்டில் இதுவரை எந்த புதிய விதிமுறைகளும் இவ்வளவு சர்ச்சைகளை சந்தித்தது இல்லை.


இந்த சர்ச்சைகளுக்குப் பின் யூடிஆர்எஸ் விதிமுறைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை இப்போது புதிதாக எழுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே தனது பயணத்தைத் தொடர்கிறது யூடிஆர்எஸ்.

1 comments: