பாணியை மாற்றுவாரா தோனி?

இந்திய தேர்வுக்குழுவினர் மற்றும் கேப்டன் தோனி இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இவரது தவறான பாணி தொடர்வதால், தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் நேரடியாக தலையிட்டு பேசியுள்ளார். பதிலுக்கு தோனியும் காட்டமாக பேச, காரசாரமான விவாதம் நடந்ததாக தெரிகிறது.


உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே தோனிக்கும் தேர்வு குழுவினருக்கும் இடையே உரசல் இருந்து வந்தது. பிரவீண் குமார் காயம் காரணமாக நீக்கப்பட, வினய் குமாருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமென தோனி வலியுறுத்தினார். ஆனால், தேர்வுக் குழுவினர் ஸ்ரீசாந்துக்கு வாய்ப்பு கொடுத்து அதிர்ச்சி அளித்தனர்.


சாவ்லா சர்ச்சை:

பின் உலக கோப்பை போட்டிகளின் போது பியுஸ் சாவ்லா மீது அதிக "பாசம்' காட்டினார் தோனி. இதன் விளைவாக தொடர்ந்து சொதப்பிய போதும், அணியில் தவறாமல் இடம் பெற்றார் சாவ்லா. இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் "பேட்டிங் ஆர்டரை' மாற்றியது, கடைசி ஓவரை வீச ஹர்பஜனுக்கு பதில் நெஹ்ராவுக்கு வாய்ப்பு அளித்தது போன்ற தவறுகளை செய்தார் தோனி. இதன் காரணமாக இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.


ஸ்ரீகாந்த் மோதல்:

இந்தச்சூழலில் தோனி தனது பாணியை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தேர்வுக்குழுவினர் இருவர் வலியுறுத்தியுள்ளனர். "சாவ்லாவுக்கு போதுமான வாய்ப்பு அளிக்கப்பட்டு விட்டது. இனி விளையாடும் 11 பேரில் அஷ்வினை சேர்க்க வேண்டும்' என, கூறியுள்ளனர்.

இதனை தோனி ஏற்றுக் கொள்ளவில்லையாம். இதையடுத்து, வழக்கமாக வீரர்கள் தேர்வு போன்ற விஷயங்களில் தலையிடாத ஸ்ரீகாந்த் களத்தில் இறங்க நேர்ந்துள்ளது. சென்னையில் நமது வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலுக்கு சென்றுள்ளார்.

தோனியை சந்தித்து, அணித் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அப்போது தோனி மற்றும் ஸ்ரீகாந்த் இடையே காரசாரமான வாக்குவாதம் நடந்துள்ளது. இறுதியில், "முடிவு எடுக்கும் அதிகாரம் கேப்டன் கையில் தான் உள்ளது,'' என்று கூறி அங்கிருந்து சென்று விட்டாõராம் ஸ்ரீகாந்த்.

இவர்களுக்கு இடையே நடந்த மோதலின் போது இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலர் சீனிவாசனும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.

இது பற்றி ஸ்ரீகாந்திடம் கருத்து கேட்க நிருபர்கள் முற்பட்டனர். அப்போது,""இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் போட்டி முடிந்த பின் பேசுவோம்,'' என்று கூறி, நழுவினார்.
--------------


பி.சி.சி.ஐ., மறுப்பு

தோனி-ஸ்ரீகாந்த் தொடர்பான செய்திகளை பி.சி.சி.ஐ., மறுத்துள்ளது. இது குறித்து இதன் செயலர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,""ஆதாரமற்ற செய்திகள் வெளியாகியுள்ளன. தோனி-ஸ்ரீகாந்த் இடையிலான சந்திப்பு நடக்கவே இல்லை,''என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment