கபில் கூட்டணியில் சேருவாரா தோனி?

உலக கோப்பை வென்ற இரண்டாவது இந்திய கேப்டன் என்ற பெருமையை தோனி பெற வாய்ப்பு உள்ளது. இப்பட்டியலில் நான் மட்டும் 28 ஆண்டுகளாக தனிமையில் இருக்கிறேன். என்னோடு தோனியும் சேர வேண்டும்,என, கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

கடந்த 1983ல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி, உலக கோப்பை வென்று, வரலாறு படைத்தது. தற்போது "தோனியின் படை சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.


இது குறித்து கபில் தேவ் கூறியது:

இந்திய அணி இரண்டாவது முறையாக உலக கோப்பை வெல்லும் நேரம் நெருங்கி விட்டது. இதற்கான திறமை தோனி தலைமையிலான அணியிடம் உள்ளது. அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 28 ஆண்டுகளாக உலக கோப்பை வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையுடன், நான் மட்டும் தனிமையில் இருக்கிறேன். என்னோடு யாராவது சேர வேண்டும் என விரும்புகிறேன்.

இதற்கேற்ப, உலக கோப்பை வென்ற இரண்டாவது இந்திய கேப்டன் என்ற பெருமையை தோனி பெறலாம். இம்முறை நல்லதே நடக்கும் என நம்புவோம். வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வுடன் தான் ஒவ்வொருவரும் மைதானத்தில் களமிறங்குகிறோம். தற்போதைய இந்திய அணி சாதித்துக் காட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.


பவுலிங் பிரச்னை:


இந்திய அணியின் பவுலிங் பலவீனமாக உள்ளது என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள இயலாது. இதே பவுலர்களுடன் தான் லீக் சுற்று முதல் காலிறுதி வரை வென்றுள்ளோம். இவர்களது சிறப்பான செயல்பாடு காரணமாக தான் அரையிறுதியை எட்டியுள்ளோம். மிக முக்கியமான அரையிறுதியில் பேட்ஸ்மேன்கள் கூடுதல் பொறுப்புடன் ஆட வேண்டும்.


வார்த்தை போர்:

மொகாலியில் நாளை நடக்க உள்ள இந்தியா, பாகிஸ்தான் இடையிலான அரையிறுதி மிகவும் "டென்ஷனாக இருக்கும். இதில், இரு அணி வீரர்களும் வார்த்தை போரில் ஈடுபட வாய்ப்பு இல்லை.

இவ்விஷயத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மிகவும் கண்டிப்பாக உள்ளது. சம்பந்தப்பட்ட வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும். "மைக்ரோபோன் போன்ற நவீன தொழில்நுட்பம் இருப்பதால், வீரர்களின் தவறை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

எனவே, எந்த ஒரு வீரரும் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆபத்து ஏற்படும் செயல்களில் ஈடுபடமாட்டார். தற்போது களத்திற்கு வெளியே தான் அதிகளவில் வார்த்தை போர் நடக்கிறது.

இவ்வாறு கபில் தேவ் கூறினார்.

0 comments:

Post a Comment