ஏழு பேட்ஸ்மேன் பார்முலா தொடரும்

ஐந்தாவது பவுலர் வேலையை "பார்ட் டைம்' பவுலர்கள் பார்த்துக்கொள்வர். இதனால் ஏழு பேட்ஸ்மேன்களுடன் இன்று களமிறங்குவோம்,'' என, இந்திய அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, சின்னச்சாமி மைதானத்தில் இதுவரை இரண்டு உலக கோப்பை லீக் போட்டிகள் நடந்துள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் நான்கு இன்னிங்சில், அனைத்து அணிகளும் 326 ரன்களுக்கு மேல் குவித்தது. இதனால் பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக பெங்களூரு மாறியுள்ளது.

இந்நிலையில் இன்று இந்திய அணி தனது மூன்றாவது லீக் போட்டியில், அயர்லாந்தை சந்திக்கிறது. இந்த போட்டி குறித்து கேப்டன் தோனி கூறியது:

பெங்களூரு மைதானம் ஒளிவெள்ளத்தில் பேட்டிங் செய்ய சிறப்பாக உள்ளது. இங்கு இரண்டாவதாக பேட்டிங் செய்யும் போது, பந்து பேட்டிற்கு நன்றாக வருகிறது. சுழலுக்கும் சற்று ஒத்துழைப்பதால், கூடுதல் வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கப் போவதில்லை.

பொதுவாக இந்தியாவில் வேகப்பந்துக்கு ஒத்துழைக்கும் ஆடுகளங்கள் இல்லை. இது மோசமானது. பந்துவீச்சில் திருப்பம் ஏற்படும் நிலை இருக்கும் போது, வேகப்பந்துக்கு சாதகமாக எதிர்பார்க்க முடியாது.


பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம்:

இன்று பந்து வீச்சில் திருப்பம் ஏற்படுமா இல்லையா என்பதை சொல்வது மிகவும் கடினம். ஏனெனில் கடைசியாக இங்கு நடந்த 2 போட்டிகளில் 1300க்கும் மேற்பட்ட ரன்கள் எடுக்கப்பட்டன. இன்றும், இதுபோல அதிக ரன்கள் எடுக்கப்படும் என்று நம்புகிறேன். ஏனெனில் இங்கு பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.


ஐந்தாவது பவுலர்?

ஐந்து பவுலர்களுடன் களமிறங்குவது என்பது தேவையில்லாதது. நமது பலத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அணிக்கு 30 ரன்கள் போதவில்லை என்ற நிலையில், யூசுப் பதான் அணியில் இருந்தால், அவரும் யுவராஜ் சிங்கும் சேர்ந்து ஐந்தாவது பவுலர் பணியை செய்வார்கள். இந்நிலையில் ஏழு பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கலாம்.

இந்திய அணியின் பவுலர்கள் இதுவரை பெரிய அளவில் சாதிக்கவில்லை. ஒரு போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டால், அப்புறம் எல்லாம் மாறிவிடும். இருப்பினும், பேட்ஸ்மேன்கள் முழு அளவில் திறமை வெளிப்படுத்தி வருவது பாராட்டுக்குரியது. அணியில் அனைவரும் ரன்கள் குவிக்கின்றனர். இதனால் ஒவ்வொரு இடத்துக்கும் போட்டி அதிகரித்துள்ளது.


கோஹ்லிக்கு பாராட்டு:

யுவராஜ் நான்காவது இடத்தில் களமிறங்க விரும்புகிறார். இந்த இடத்தில் வரும் விராத் கோஹ்லி, வேக மற்றும் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தவிர, 5, 6 அல்லது 7வது இடமாக இருந்தாலும் திறமையாக விளையாடுகிறார். ஆனால் நேரத்துக்கு ஏற்ப ரன்விகிதத்தை அதிகரிக்க யுவராஜ், யூசுப் பதானை களமிறக்கலாம்.


அஷ்வினுக்கு வாய்ப்பு?

அயர்லாந்து அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகமாக உள்ளனர். இதனால் ஹர்பஜன், யூசுப் பதான் போன்றவர்கள் இருந்தாலும், கூடுதல் "ஆப்' ஸ்பின்னர்களுடன் களமிறங்க வேண்டிய முடிவு ஏற்பட்டுள்ளது. சாவ்லா கடந்த போட்டிகளில் அதிக ரன்கள் கொடுத்திருந்தாலும், அவர் முக்கிய நேரங்களில் உதவுவார். அதேநேரத்தில் அஷ்வினும் இதற்கு முன் சிறப்பாக செயல்பட்டுள்ளார். குறிப்பாக, முதல் 10 ஓவர்கள் கூட பவுலிங் செய்யச் சொல்லலாம்.


பலவீனமானது அல்ல:

உலக கோப்பை தொடரை பொறுத்தவரையில் எந்த அணியையும், பலவீனமானது என்று நாங்கள் எப்போதும் கூறியதில்லை. இதனால், அயர்லாந்துக்கு எதிராக தவறு செய்யமாட்டோம். இந்த அணியின் கெவின் ஓ பிரையன், இங்கிலாந்துக்கு எதிராக நம்பமுடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நமக்கு எதிராக இப்படி விளையாட மாட்டார் என்று நம்புகிறேன். இவரை மீண்டும் ரன் அவுட்டாக்க முயற்சிப்போம்.
இவ்வாறு தோனி கூறினார்.


உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள்

""ரசிர்கள் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்,'' என, கேப்டன் தோனி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" வங்கதேச தோல்வியடைந்ததால், வெஸ்ட் இண்டீஸ் அணியினர் சென்ற பஸ் மீது தாக்குதல் நடத்தியது வருந்தத்தக்கது. வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.

0 comments:

Post a Comment