பலவீனமான இந்திய பவுலிங்

இந்திய அணியின் பேட்ஸ்மேன்களோடு ஒப்பிடுகையில், பவுலர்களின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை. பவுலிங் மிகவும் பலவீனமாக இருப்பது கண்கூடாகத் தெரிகிறது,''என, கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு 1983ல் உலக கோப்பை பெற்றுத் தந்தவர் கபில் தேவ். இதற்கு பின் இம்முறை தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த இரண்டு லீக் போட்டியில் நமது பவுலர்கள் ஏமாற்றினர்.

முதல் போட்டியில் பலம்குன்றிய வங்கதேச அணி 283 ரன்கள் எடுத்தது. அடுத்த போட்டியில் இங்கிலாந்து அணி 338 ரன்கள் எடுக்க, போட்டி "டை' ஆனது. இதனால், இந்திய வெற்றி நழுவியது. இது குறித்து கபில் தேவ் அளித்த பேட்டி:

இந்திய அணியின் பவுலிங் மிகவும் பலவீனமாக உள்ளது. இதனை நான் சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியமில்லை. பேட்ஸ்மேன்களோடு ஒப்பிடுகையில், பவுலர்களின் செயல்பாடு மோசமாக உள்ளது. உதாரணமாக இங்கிலாந்துக்கு எதிராக 338 ரன்களை எடுத்த போதும், போட்டி "டை' ஆனது இது மிகுந்த மிகுந்த ஏமாற்றம் அளித்தது.

இதற்காக பவுலர்களை விமர்சிக்க விரும்பவில்லை. இவர்களால் சிறப்பாக பந்துவீச முடியாது என்று கூற இயலாது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பல போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்துள்ளனர். என்னை பொறுத்தவரை அபாரமாக ஆடிய இங்கிலாந்து அணி, வெற்றி பெற்றதாக குறிப்பிடுவேன்.


அதிரடி மாற்றம்:

தற்போது, கிரிக்கெட் அரங்கில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 434 ரன்கள் எடுத்தும், ஆஸ்திரேலியா தோல்வி அடைந்ததை காண முடிந்தது. எனவே, நல்ல விஷயங்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அன்றைய தினம் இங்கிலாந்து சிறப்பாக விளையாடியது. அதற்காக அவர்களை பாராட்ட வேண்டும். தவறுகளில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.


வேகம் இல்லை:

உலக கோப்பை தொடர் நடக்கும் இந்த நேரத்தில், இந்திய அணியில் அதிவேகப்பந்துவீச்சாளர் இல்லை என்று புலம்புவதில் அர்த்தம் இல்லை. சச்சின், சேவக் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களை ஆஸ்திரேலியா அல்லது தென் ஆப்ரிக்க அணிகளில் காண முடியவில்லை. எனவே, நம்மிடம் இருப்பது, மற்றவர்களிடம் இல்லை.

எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விடாது. எதிர்காலத்தில் "சூப்பர் பாஸ்ட்' பவுலர்கள் இரண்டு பேர் தேவை என்றால், அதற்காக திட்டம் வகுக்க வேண்டும்.


ஆர்வம் வேண்டும்:

ஒவ்வொருவரும் சச்சின், சேவக் அல்லது தோனியாக வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். சிலராவது வேகப்பந்துவீச்சாளராக ஆர்வம் தெரிவிக்க வேண்டும். பெற்றோர் தங்களது குழந்தைகள் கும்ளே போல் அல்லாமல் சச்சின் மாதிரி வர வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். இந்திய அணியின் வெற்றி நாயகர்களில் கும்ளேவும் ஒருவர் என்பதை மறந்து விடுகின்றனர்.


வீண் நெருக்கடி:

ஐ.சி.சி., நடத்தும் முக்கிய தொடர்களில், போட்டிகளின் முடிவை தான் நம்மவர்கள் அதிகம் நினைக்கின்றனர். இதன் காரணமாக நெருக்கடி ஏற்பட்டு, சிறப்பாக செயல்பட முடியாமல் போகிறது. இந்த நெருக்கடியில் இருந்து விடுபடும் போது தான் வெற்றிப் பாதையை கண்டு கொள்ள முடியும். தற்போதைய உலக கோப்பை தொடரில் குறிப்பிட்ட அணிக்கு தான் வாய்ப்பு என்று உறுதியாக கூற முடியாது. எந்த ஒரு அணியும் முழுமையாக ஆதிக்கம் செலுத்த இயலாது.


தவறான முடிவு:

அடுத்த உலக கோப்பை தொடரில் கத்துக் குட்டி அணிகள் நீக்கப்படும் என்ற ஐ.சி.சி., முடிவு தவறானது. இது, கிரிக்கெட்டை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தும் முயற்சிக்கு தடையாக அமையும். அனுபவம் இல்லாத அணிகளோடு மோதும் போட்டிகள், முன்னணி அணிகளுக்கு சிறந்த பயிற்சியாக அமைகின்றன.

என்னை பொறுத்தவரை கத்துக்குட்டி அணிகள் மற்றும் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளின் "பி' அணிகள் பங்கேற்கும் இன்னொரு உலக கோப்பை தொடரை நடத்த வேண்டும்.
இவ்வாறு கபில் தேவ் கூறினார்

0 comments:

Post a Comment