கோப்பை கைப்பற்றுமா இந்தியா?

முத்தரப்பு தொடரின் பைனலில் இன்று இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில், தோனி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று, கோப்பை கைப்பற்ற காத்திருக்கிறது. சொந்த மண்ணில் சாதிக்க இலங்கையும் முயற்சிக்கும் என்பதால், ஆக்ரோஷமான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.


இலங்கையில் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. லீக் சுற்றில் ஏமாற்றிய நியூசிலாந்து வெளியேறியது. இன்று தம்புலாவில் நடக்கும் பைனலில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.


"ஒன் மேன் ஆர்மி':இத்தொடரின் துவக்கத்தில் இருந்தே இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. சேவக் மட்டும் தனி நபராக போராடி அணியை பைனலுக்கு அழைத்து வந்தார். கடந்த போட்டியில் சதமடித்த இவர், இத்தொடரில் அதிக ரன்கள் (240) எடுத்து முதலிடத்தில் உள்ளார். இவர் மீண்டும் ஒருமுறை கைகொடுத்தால், இந்திய அணி எளிதாக கோப்பை வெல்லலாம்.


சொதப்பும் வீரர்கள்:சச்சின், காம்பிர் இல்லாத நிலையில் யுவராஜ் (49 ரன்கள்), ஜடேஜா (37) மற்றும் ரெய்னா (36) ஆகியோர் சொதப்புகிறார்கள். துவக்கவீரர் தினேஷ் கார்த்திக் இதுவரை 4 போட்டியில் 33 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். தவிர, ரோகித் சர்மா, கோஹ்லியும் தங்கள் பங்கிற்கு ரசிகர்களை வெறுப்படையச் செய்கின்றனர். இவர்கள் எல்லாம், இன்று எழுச்சி காண வேண்டும். தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாடுவது மிகவும் அவசியம். கேப்டன் தோனி (73) தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.


அஷ்வின் வாய்ப்பு:அணியின் வேகப்பந்து வீச்சு பிரிவில் பிரவீண் குமார் (8 விக்.,), நெஹ்ரா (7 விக்.,) இருவரும், இத்தொடரில் நம்பிக்கை தருவது சற்று ஆறுதலான விஷயம். இவர்களுடன் இஷாந்த் சர்மாவும் விக்கெட் வேட்டையில் ஈடுபடுவதால் எதிரணியின் ரன்வேகத்தை கட்டுப்படுத்த முடிகிறது. ஆனால் சுழற்பந்து வீச்சில் ரவிந்திர ஜடேஜா தொடர்ந்து ஏமாற்றுகிறார். இவருக்குப்பதில் அஷ்வினுக்கு வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாம்.


அனைத்துமே பலம்:இலங்கை அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்து பிரிவிலும் சிறந்து விளங்குகிறது. கேப்டன் சங்ககரா, தில்ஷன், தரங்கா, ஜெயவர்தனா ஆகியோர் சராசரியாக ரன்குவிப்பது பலம் தான். தவிர, சமரவீராவும் அசத்துகிறார். பவுலிங்கில் மாத்யூஸ் தொடர்ந்து சாதிக்கிறார். மலிங்கா, குலசேகராவும் சங்ககராவுக்கு அதிக நம்பிக்கை தருகின்றனர். தவிர, கடந்த போட்டியில் பெரேரா ஐந்து விக்கெட் வீழ்த்தியதையும் மறந்துவிட முடியாது. சுழலில் "நோ-பால்' புகழ் ரந்திவ், மெண்டிஸ், ஹெராத் என எல்லோரும் பார்மில் உள்ளனர்.

இத்தொடரின் துவக்கத்தில் இருந்தே ஒவ்வொரு போட்டியின் முடிவும், மிகப்பெரிய வித்தியாசத்தில், ஒருதலைப்பட்சமாகத்தான் முடிந்தது. தவிர, போட்டியின் முடிவை பெரும்பாலும் "டாஸ்' தான் நிர்ணயிக்கிறது. இது பைனலிலும் தொடரலாம்.


மழை வாய்ப்பு
தம்புலா மைதானத்தின் அதிக பட்ச வெப்பநிலை 32, குறைந்தபட்சம் 23 டிகிரியாக இருக்கும். வானம் பெரும்பாலும் மேகமூட்டமாக காணப்படும். மாலையில் லேசான மழை வர வாய்ப்புள்ளது.


சாதிப்பாரா தோனி
தோனி தலைமையில் இந்திய அணி, இலங்கையில் தொடர்ந்து நான்கு ஒருநாள் தொடர்களில் கோப்பை வென்றுள்ளது. கடந்த 2008 (3-2), 2009 (4-1) ல் நடந்த ஒருநாள் தொடர்கள், 2009 முத்தரப்பு தொடர், சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை என, மொத்தம் நான்கு முறை சாதித்துள்ளது. இன்றும் வெல்லும் பட்சத்தில் ஐந்தாவது முறையாக கோப்பை வென்று அசத்தலாம்.


கூடுதல் முயற்சி தேவை: சங்ககரா
இலங்கை கேப்டன் சங்ககரா கூறுகையில்,"" பொதுவாக பைனலின் போது, இந்திய அணியினர் எங்களை விட சிறப்பாக செயல்பட்டு கோப்பை வென்று விடுவர். இது பலமுறை நடந்துள்ளது. இம்முறை சற்று கூடுதல் முயற்சி எடுத்து, ஐந்தாவது முறையாக கோப்பை வெல்வதை தடுப்போம். சேவக் அசத்தலான வீரர் என்பதில் சந்தேகமில்லை. இவரை விரைவில் அவுட்டாக்கினால், எங்களுக்கு நல்லது,'' என்றார்.


இதுவரை...
* தம்புலா ரங்கிரி மைதானத்தில் இந்திய அணி இதுவரை பங்கேற்ற 16 போட்டிகளில் 9ல் வெற்றி, 7ல் தோல்வியடைந்துள்ளது.
* இலங்கை பங்கேற்ற 33 போட்டிகளில் 22ல் வெற்றி, 10ல் தோல்வியடைந்துள்ளது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.

0 comments:

Post a Comment