கடவுள் கொடுத்த பரிசு: சச்சின்

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நான் சுமையாக கருதவில்லை. அதை கடவுள் கொடுத்த பரிசாகவே கருதுகிறேன்,'' என, சச்சின் தெரிவித்தார்.

கொழும்புவில் இன்று நடக்கும் இந்தியா, இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் புதிய சாதனை படைக்க உள்ளார். டெஸ்ட் அரங்கில் 169 வது போட்டியில், களமிறங்க உள்ள சச்சின், அதிக போட்டிகளில் விளையாடியுள்ள வீரர் என்ற பெருமை பெற உள்ளார். இது குறித்து சச்சின் கூறியது:

கடந்த 20 ஆண்டுகளாக கிரிக்கெட்டை ரசித்து விளையாடி வருகிறேன். இது எனது கனவு. எனது ஆசை. கிரிக்கெட் அரங்கில், ஒவ்வொரு நிமிடத்தையும் நான் மகிழ்ச்சியுடன் கழித்து வருகிறேன். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நான் சுமையாகக் கருத வில்லை. இதை கடவுள் கொடுத்த பரிசாகவே கருதுகிறேன்.

கடந்த 1989 ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முதன் முதலில் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியதை நான் நினைத்துப் பார்க்கிறேன். அது எனது வாழ்நாளின் மறக்க முடியாத நிகழ்வு. இதற்கு ஒப்பானது வேறு எதுவும் இல்லை. 169 வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி சாதனை படைக்க விருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் எதிர்பார்த்ததை விட, வெகு விரைவாக எனது கிரிக்கெட் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.

கிரிக்கெட் அரங்கில் பல முறை கஷ்டமான காலகட்டங்களை நான் கடந்துள்ளேன். அந்த சமயங்களில், மனம் தளரவில்லை. அதற்கான காரணத்தை கண்டுபிடித்து, சிறப்பாக செயல்பட முயற்சி செய்வேன். ரசிகர்கள் கொடுத்த பெரும் ஆதரவு, பல சமயங்களில் எனக்கு உற்சாகத்தை அளிப்பதாய் அமைந்தது. கிரிக்கெட் அரங்கில் எனது சாதனைகளை ஒரு இந்திய வீரரால் தான் தகர்க்க முடியும் என நான் நம்புகிறேன்.

இளம் வீரர்கள் முதலில் கனவு காண வேண்டும். பின்னர் அதனை நோக்கி முன்னேற வேண்டும். கடின முயற்சியுடனும், உண்மையுடனும் செயல்பட்டால், கூடிய விரைவில் கனவு நனவாகும். இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment