உலககோப்பை நெருங்கும் நேரத்தில்

உலககோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2011) மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடக்கிறது.

உலககோப்பை போட்டி தொடங்க இன்னும் 7 மாதங்கள் உள்ள நிலையில் பல வீரர்கள் காயத்தால் அவதிப்படுகின்றனர். முன்னணி வீரர்கள் உடல் தகுதி இல்லாமல் இருப்பதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (பி.சி.சி.ஐ.) கவலை அடைந்து உள்ளது.

காயம் காரணமாக ஜாகீர்கான், ஸ்ரீசாந்த், காம்பீர், ஹர்பஜன்சிங் ஆகியோர் 3 நாடுகள் போட்டியில் ஆட வில்லை. அணியில் உள்ள யுவராஜ் சிங், ரோகித் சர்மா ஆகியோரும் உடல் தகுதியுடன் இல்லை. தோள்பட்டை, முழங்கால் ஆகிய காயத்தில் வீரர்கள் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

இதற்கு காரணம் வீரர்கள் ஓய்வு இல்லாமல் அதிகமான அளவில் போட்டிகளில் பங்கேற்பதுதான். போட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று முன்னணி வீரர்கள் கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். இது குறித்து கிரிக்கெட் வாரியம் சிந்திக்க வேண்டும்.

இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியாவுடனும், நியூசிலாந்துவுடனும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. மொத்தம் 5 டெஸ்ட், 7 ஒருநாள் போட்டிகளில் ஆடவேண்டும். அதற்கு முன்னதாக சில வீரர்கள் சாம்பியன் லீக் போட்டியில் ஆட வேண்டி உள்ளது.

வீரர்களின் காயத்தால் உலககோப்பை போட்டிக்கான 15 சிறந்த வீரர்களை தேர்வு செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது. கடந்த 20 ஓவர் உலககோப்பையிலும், சாம்பியன் டிராபி போட்டியிலும் காயம் காரணமாகவே இந்திய அணியால் சிறப்பாக ஆட முடியவில்லை. இதனால் அதே நிலைமை 2011-ம் ஆண்டு உலககோப்பையில் வந்து விடக்கூடாது.

மேலும் இந்திய அணியில் சிறந்த ஆல் ரவுண்டர் இல்லாமல் இருப்பது பாதிப்பை ஏற்படுத்தும். ரவீந்திர ஜடேஜாவால் முக்கிய பங்களிப்பாக இருக்க முடிய வில்லை. கபில்தேவ் போன்ற ஆல்ரவுண்டர்கள் அணிக்கு தேவை. யூசுப்பதான் அல்லது இர்பான்பதானை கொண்டு வருவது அணிக்கு பலம் சேர்க்குமா என்பதை தேர்வு குழு முடிவு செய்ய வேண்டும்.

0 comments:

Post a Comment