பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு தேவை

பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு தேவை எனவும் அப்போதுதான் அவர்கள் சிறப்பாக விளையாட முடியும் எனவும் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி கூறியுள்ளார்.

இது குறித்து தம்புலாவில் (இலங்கை) செய்தியாளர் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பேசிய அவர் கூறியது: "இந்திய அணியை பொறுத்தவரை பந்து வீச்சில் சற்று பின்தங்கித்தான் உள்ளது. பேட்ஸ் மேன்களுக்கும் பௌலர்களுக்கும் அதிக வித்தியாசம் உண்டு.

பேட்ஸ்மேன்களை விட பௌலர்களுக்கு பொறுப்பும் பணியும் அதிகம். எனவே ஒரு போட்டிக்கும் மற்றொரு போட்டிக்கும் இடையே பௌலர்களுக்கு போதிய ஓய்வு தரப்பட வேண்டும்.

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் ஆட்டம் ஆகியவற்றில் இடைவெளி இன்றி அவர்கள் விளையாடுவதால் போட்டியின் போது களைப்பு மற்றும் அதிக பணிச் சுமையால் காயம் ஏற்படுகிறது.

இலங்கையுடனான டெஸ்ட் தொடர் டிரா ஆனது. முத்தரப்பு கிரிக்கெட்டில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் அதிக ரன் வித்தியாசத்தில் தோற்றோம். இதனால் தற்போதைய இலங்கை பயணம் எங்களுக்கு ஏமாற்றம் அளித்திருப்பது உண்மை.

கடந்த 3 நாள்களாக நடந்த பயிற்சியின் போதும் இந்திய அணியின் விக்கெட் வீழ்த்தும் திறன் சிறப்பாக இல்லை. ஆனாலும் நாங்கள் நம்பிக்கை இழந்து விடவில்லை. தொடர்ந்து முயற்சித்து சவால்களை சந்தித்து வெற்றி வாகை சூடுவோம்.

திங்கள்கிழமை ஆட்டத்தில் முனாப் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கிறோம்' என்றார் தோனி.

0 comments:

Post a Comment