இந்திய கிரிக்கெட் வீரர்கள் எதிர்ப்பு

முக்கியத்துவம் இல்லாத போட்டிகளை ரத்து செய்து, வீரர்களின் சுமையை குறைக்க வேண்டும்,'' என, வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) கடிதம் எழுதியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியினர், ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். இது வீரர்கள் இடையே மன சோர்வையும், பலவீனத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தற்போது இலங்கையில் நடக்கும் முத்தரப்பு தொடரில் கிடைத்த 5 நாள் இடைவெளியில், 3 நாட்கள் இந்தியா வர அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான மோசமான தோல்வியை அடுத்து, வீரர்கள் இந்தியா வர பி.சி.சி.ஐ., தடை போட்டது. பொறுத்து பார்த்த இந்திய வீரர்கள், தங்கள் மனக்குறையை தெரிவிக்கும் வகையில், பி.சி.சி.ஐ.,க்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது.

மாற்ற வேண்டும்:

இதன்படி அடுத்து வரும் சில மாதங்களில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளில், முக்கியத்துவம் இல்லாதவைகளை குறைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் ஒருபகுதியாக அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிராக, இந்தியாவில் விளையாடும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை, 2 போட்டிகள் கொண்ட தொடராக மாற்றி அமைக்கும்படி, கேட்டுக்கொண்டுள்ளனர்.

தவிர, வரும் டிசம்பரில் தென் ஆப்ரிக்காவில் பங்கேற்கும் தொடரை, ஒருவாரம் முன்னதாக துவங்கும் வகையில் மாற்றி அமைக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

பி.சி.சி.ஐ., மறுப்பு:

ஆனால் இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து அப்படி எதுவும் கடிதம் வரவில்லை என பி.சி.சி.ஐ., நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சுழற்சி முறை:

சோர்வாக இருக்கும் வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டு, வேறு வீரர்கள் பங்கேற்கும் வகையில் சுழற்சி முறையை பி.சி.சி.ஐ., ஏற்கனவே அறிமுகம் செய்தது. ஆனால் இதற்கு இந்திய அணியின் கேப்டன் தோனி உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தவிர, அணியின் வெற்றி தொடர வேண்டுமெனில், இந்த முறையை மாற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

0 comments:

Post a Comment