ஆடுகளம் மோசம்: வெளியேறினார் தோனி

தம்புலாவில் உள்ள பயிற்சி ஆடுகளம் மோசமாக உள்ளது என மைதானத்தை விட்டு வெளியேறினார் இந்திய கேப்டன் தோனி. இங்கு பயிற்சி மேற்கொண்ட தினேஷ் கார்த்திக் காயம் அடைந்தார்.

இந்தியா, இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கிறது. முதல் 2 போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து 5, இலங்கை 4 புள்ளிகள் பெற்றுள்ளன. மூன்றாவது போட்டி, நாளை ரங்கிரி தம்புலா மைதானத்தில் நடக்க உள்ளது. இதில், இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. இதற்காக நேற்று 3 மணி நேர பயிற்சியில், இந்திய அணி ஈடுபட்டது.

கார்த்திக் காயம்:

பயிற்சிக்காக ஒதுக்கப்பட்ட ஆடுகளத்தின் தன்மை மிகவும் மோசமாக இருந்துள்ளது. பந்து அதிக அளவில் "பவுன்ஸ்' ஆகி உள்ளது. இதனால் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டிருந்த துவக்க வீரர் தினேஷ் கார்த்திக்கின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர், நாளை நடக்க உள்ள போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தோனி கோபம்:

ஆடுகளத்தின் தன்மை மோசமாக இருந்தததை அறிந்த, இந்திய கேப்டன் தோனி கடுமையாக கோபம் அடைந்தார். உடனடியாக பயிற்சியை புறக்கணித்து விட்டு, வெளியேறினார்.

இது குறித்து இந்திய அணியின் மானேஜர் ரஞ்சிப் பிஸ்வால் கூறுகையில்,"" பயிற்சி மேற்கொள்ள மைதானத்தில் நல்ல முறையில் வசதிகள் உள்ளன. ஆனால் பயிற்சிக்குரிய ஆடுகளம் சரியில்லை. இதில் ஒரு சில குறைபாடுகள் உள்ளன. ஆனால் வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை.'' என்றார்.

1 comments: