ஐ.பி.எல்., வீரர்கள் ஏலத்தில் சர்ச்சை

ஐ.பி.எல்., அரங்கில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 2009 ம் ஆண்டு நடந்த வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பிளின்டாப் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.


இதில் முன்னாள் ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி மற்றும் பி.சி.சி.ஐ.,செயலாளர் சீனிவாசன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.


ஐ.பி.எல்., (இந்தியன் பிரிமியர் லீக்) "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர், கடந்த 2008 ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வீரர்கள் ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த 2009 ம் ஆண்டு நடந்த ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இங்கிலாந்து வீரர் ஆன்ட்ரூ பிளின்டாப்பை ரூ. 7.25 கோடிக்கு எடுத்தது.


இவரை ஏலத்தில் எடுப்பதில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது.


இப்பிரச்னையில் அப்போதைய ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதகமாக செயல்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஏலம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் லலித் மோடி, சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசனுக்கு இ-மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார். அதை தனியார் "டிவி' ஒன்று தற்போது வெளியிட்டுள்ளது. இதில், " பாகிஸ்தான் வீரர் தன்வீரை அணியிலிருந்து நீக்க வேண்டாம்.


பிளின்டாப்பை ஏலத்தில் எடுப்பதில் போட்டி வேண்டாம் என்று ராஜஸ்தான் அணியை சமாதானப்படுத்துவதில் நான் மிகவும் சிரமம் பட்டு விட்டேன். ராஜஸ்தான் அணியின் கேப்டன் வார்னையும் சமாதானப்படுத்தி விட்டேன்,' என, செய்தி அனுப்பி இருந்தார். இதற்கு சீனிவாசன்," தங்கள் உதவிக்கு நன்றி' என, பதில் அளித்துள்ளார்.


அதிரடி மறுப்பு:தற்போது இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏற்கனவே கடந்த 3 ஐ.பி.எல்., தொடர்களில் சுமார் 2000 கோடி ரூபாய் வரை ஊழல் செய்துள்ளதாக லலித் மோடி குற்றம் சாட்டுப்பட்டு, தலைவர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

தற்போது இவர் மீது பி.சி.சி.ஐ., கமிட்டி ஒன்றை அமைத்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளரும், பி.சி.சி.ஐ., செயலாளருமான சீனிவாசனும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனை அதிரடியாக மறுத்துள்ளார் சீனிவாசன்.


இது குறித்து அவர் கூறியது: சென்னை அணி, பிளின்டாப்பை நேர்மையான முறையில் தான் ஏலத்தில் எடுத்தது. ராஜஸ்தான் அணி, பிளின்டாப்பை ரூ. 5 கோடிக்கு ஏலம் கேட்டது. ஆனால் நாங்கள் 7.25 கோடி ரூபாய்க்கு கேட்டதால் ஏலத்தில் வெற்றி பெற்றோம். இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. இப்படியிருக்கும் மோது, லலித் மோடி ஷேன் வார்னை சமாதானப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?


வார்ன் என்ன ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளரா? ஏலத்தில் நாங்கள் எந்த தவறும் செய்ய வில்லை என்பது 100 சதவீதம் உண்மை. ஏலத்தின் போது எங்களிடம் மட்டுமே 10 கோடி ரூபாய் வரை பணம் இருந்தது. மற்ற அணிகளிடம் இதை விட குறைவாகவே இருந்தது. அதனால் பிளின்டாப்பை ஏலத்தில் எடுக்க எங்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை என்பதே உண்மை. இவ்வாறு சீனிவாசன் தெரிவித்தார்.


வார்ன் அதிர்ச்சி: இந்த விவகாரம் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஷேன் வார்ன் கூறுகையில்,"" இப்பிரச்னை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் இது போன்ற செயல்களில் எப்போதும் செயல்படாது. எனக்கு இதில் எந்த வித தொடர்பும் இல்லை,'' என்றார்.

0 comments:

Post a Comment