வீரர்கள் கடிதம்: பி.சி.சி.ஐ., மறுப்பு

தொடர்ச்சியான போட்டிகள் குறித்து வீரர்களிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை. சோர்வு அல்லது காயத்துடன் தொடர்ந்து விளையாடும் படி யாரையும் வற்புறுத்தியது இல்லை,' என, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தெரிவித்துள்ளது.

ஆண்டு முழுவதும் தொடர்ச்சியான போட்டிகளில் பங்கேற்பதால், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மன சோர்வு, பலவீனத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால் தேவையற்ற போட்டிகளை குறைக்க வேண்டும் என, இந்திய வீரர்கள் பி.சி.சி.ஐ.,க்கு கடிதம் எழுதியதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து இதன் மீடியா மற்றும் நிதிக்கமிட்டித் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியது:


கடுமையான சோர்வு, காயம் மற்றும் உடற்தகுதி இல்லாத நேரங்களில் தங்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை எனில், வீரர்கள் தேர்வாளர்களிடம் தெரிவிக்கலாம். எந்த வீரர்களையும் குறிப்பிட்ட தொடரில் விளையாடித்தான் ஆகவேண்டும் என கட்டாயப்படுத்துவதில்லை. ஏனெனில் அவர்களுக்கு ஓய்வு கொடுப்பது என்பதில், பி.சி.சி.ஐ., தெளிவாக உள்ளது.

அதிகப்படியான போட்டிகளால் வீரர்கள் மகிழ்ச்சியற்ற நிலையில் இருப்பதாக எவ்வித புகார் அல்லது கடிதம் வரவில்லை. அப்படி வெளியான செய்திகளில் உண்மையில்லை. இது தவறானவை.

இவ்வாறு ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.

சீனிவாசன் மறுப்பு:

இது குறித்து பி.சி.சி.ஐ., செயலர் சீனிவாசன் கூறுகையில்,"" தோனி மற்றும் எந்த வீரரிடம் இருந்தும் எனக்கு எவ்வித கடிதமும் வரவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பில் தோனி என்ன கூறினார் என, எனக்குத் தெரியாது.

அவர் தெரிவித்த கருத்தை தெரிந்து கொண்டு, பிறகு நான் பதில் சொல்கிறேன். அதிகப்படியான போட்டிகளால் தான் வீரர்கள் காயமடைகின்றனர் என்பது தவறு,'' என்றார்.

0 comments:

Post a Comment