சச்சின் பேட்டில் அசத்தப் போகும் பாக்., வீரர்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், சச்சின் பயன்படுத்திய "பேட்டில்' அசத்த உள்ளார், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அறிமுக வீரர் உமர் அமின். 

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் ஜூன் 15 ம் தேதி துவங்குகிறது. இத்தொடருக்கான பாகிஸ்தான் அணியில் அறிமுக வீரராக உமர் அமின் இடம் பெற்றுள்ளார். இவர் இத்தொடரில் சச்சின் பயன்படுத்திய பேட்டை உபயோகப்படுத்த உள்ளார். 

உள்ளூர் கிரிக்கெட் தொடரில் கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்டு அசத்திய உமர் அமினுக்கு, சக நாட்டு வீரர் சோயப் அக்தர், சச்சினின் "பேட்டை' பரிசாக கொடுத்துள்ளார். இது குறித்து அமின் கூறுகையில்,"" உள்ளூர் கிரிக்கெட் தொடரின் போது எனது சிறப்பான ஆட்டம், ஒரு போட்டியின் வெற்றிக்கு வித்திட்டது. 

அப்போது இந்த "பேட்' எனக்கு பரிசாக அளிக்கப்பட்டது. இதனை ஒரு பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் போது, இந்த "பேட்டை' பயன்படுத்தி விளையாட உள்ளேன். பாகிஸ்தான் அணியில் வாய்ப்பு கிடைத்தது, எனக்கு மட்டுமின்றி எனது குடும்பத்தினருக்கும் மிகவும் மகிழ்ச்சி அளித்தது,'' என்றார்.

0 comments:

Post a Comment