யுவராஜ் சிங் வீட்டின் மீது கல்வீச்சு

டுவென்டி–20’ உலக கோப்பை பைனலில் சொதப்பிய யுவராஜ் சிங் வீட்டின் மீது ரசிகர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

வங்கதேசத்தில் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் பைனல் நடந்தது. இதில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. 

இந்திய அணியின் பேட்டிங்கின் போது, 21 பந்துகளை சந்தித்து 11 ரன்கள் மட்டும் எடுத்து வெறுப்பேற்றினார் யுவராஜ் சிங். இது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

கடந்த 2007ல் நடந்த ‘டுவென்டி–20’ கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 6 பந்தில் 6 சிக்சர் அடித்த யுவராஜ் சிங், பைனலில் இப்படி பந்துகளை வீணடித்ததை, ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இதையடுத்து கோபமடைந்த ரசிகர்கள், நேற்று முன்தினம் இரவு சண்டிகரில் உள்ள யுவராஜ் சிங் வீடு மீது, கல்வீசி தாக்கினர். அடையாளம் தெரியாத நபர்கள், மூன்று கார்களில் யுவராஜ் சிங் வீடு அருகே காணப்பட்டனர்.

விரைந்து வந்த போலீசார், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இப்போது, யுவராஜ் சிங் வீட்டிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


தந்தை ஆதரவு:

யுவராஜ் சிங் தந்தையும் முன்னாள் வீரருமான யோகராஜ் கூறுகையில்,‘‘ வெற்றி அல்லது தோல்வி, ஏற்றம் அல்லது இறக்கம் எல்லாம் விளையாட்டில் சகஜம். தோல்வி அடையும்போது பலதரப்பில் இருந்து விமர்சனங்கள் வரத்தான் செய்யும். பைனலில், இந்திய அணி அடைந்த தோல்விக்கு யுவராஜ் சிங் ஒருவரை மட்டும் குற்றம் சுமத்தக் கூடாது. இவர் அதிகமான உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்,’’ என்றார்.


தோனி வெறுப்பு:

இந்திய அணி கேப்டன் தோனி கூறியது:

வந்த வேகத்தில் முதல் பந்தில் இருந்து அடித்து விளையாடுவது என்பது அவ்வளவு எளிதல்ல. யுவராஜ் சிங் முடிந்தவரை நன்றாகத்தான் செயல்படத்தான் முயன்றார். என்ன செய்ய, அன்று அவரது நாளாக அமையவில்லை.

40,000 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில், எந்த வீரரும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டும் என, விரும்பமாட்டார். ‘கேட்சை’ கோட்டை விட நினைக்க மாட்டார்.

ஆனால், மோசமான நாளாகி விட்டால் எல்லாம் நடக்கும். அனைத்து வீரர்களுக்கும் இப்படி நடப்பது இயற்கை. இது போலத்தான் யுவராஜ் சிங்கிற்கு நடந்தது. இதனால், ஒருவரை மட்டும் குறித்து பேசுவது சரியல்ல.

இவருக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்கின்றனர். இப்போது சர்வதேச போட்டிகள் முடிந்துவிட்டன. அடுத்து உள்ளூர் சீசன் (பிரிமியர்) துவங்குகிறது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிக்கு அதிக இடைவெளி உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பேசுவது சரியல்ல.

இவ்வாறு தோனி கூறினார்.

0 comments:

Post a Comment