மறக்க முடியாத தோல்வி - யுவராஜ் கவலை

இலங்கைக்கு எதிரான ‘டுவென்டி–20’ உலக கோப்பை பைனலில் கண்ட தோல்வியை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை,’’ என, பெங்களூரு அணியின் யுவராஜ் சிங் கவலை தெரிவித்தார்.

சமீபத்தில் வங்கதேசத்தில் நடந்த ‘டுவென்டி–20’ உலக கோப்பை பைனலில், இந்திய அணி, இலங்கையிடம் தோல்வி அடைந்தது. 

இப்போட்டியில் மோசமாக பேட்டிங் செய்த யுவராஜ் சிங் தான் தோல்விக்கு காரணம் என செய்திகள் வௌியாகின. 

ஏழாவது ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் ரூ. 14 கோடிக்கு பெங்களூரு அணியில் யுவராஜ் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனால் இவர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து யுவராஜ் சிங் கூறியது: ‘டுவென்டி–20’ உலக கோப்பை பைனலில் கண்ட தோல்வியை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. பொதுவாக பைனல் போன்ற மிகப் பெரிய போட்டிகளை எளிதில் மறந்துவிட முடியாது. 

ஆனால் ஒரு வீரர், கடந்த கால தோல்விகளை மறந்தால் தான், அடுத்து வரும் போட்டிகளில் சாதிக்க முடியும். இத்தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. ஆனால் துரதிருஷ்டவசமாக பைனலில் வெற்றி பெற முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. 

ஒரு வீரர் வெற்றி, தோல்விகளை சமமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என இளம் வயதில் எனது பயிற்சியாளர் ஒருவர் அடிக்கடி கூறுவார்.

தற்போது 7வது ஐ.பி.எல்., தொடரில் கவனம் செலுத்தி வரும் எனக்கு, உலக கோப்பை பைனல் தோல்வியின் பிடியில் இருந்து மீளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

பெங்களூரு அணியினரோடு இணைந்து பயிற்சி மேற்கொண்டேன். கிறிஸ் கெய்ல், முத்தையா முரளிதரன், டிவிலியர்ஸ், டேனியல் வெட்டோரி, டொனால்டு போன்ற சர்வதேச வீரர்களுடன் ‘டிரஸிங் ரூமை’ பகிர்ந்து கொள்வது சுவாரஸ்யம் நிறைந்தது.

ஐ.பி.எல்., போட்டிகள் முதன்முறையாக ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடப்பதால் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்களும் அதிக அளவில் ஆதரவு அளிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.

0 comments:

Post a Comment