கோஹ்லியை முந்தினார் தோனி

விளம்பர உலகில் கொடி கட்டிப்பறக்கிறார் கேப்டன் தோனி. ஒரு பொருளுக்கு ‘மாடலாக’ தோன்ற ஆண்டுக்கு ரூ. 13 கோடி பெறுகிறார். இதன் மூலம் விராத் கோஹ்லியை முந்தினார்.

இந்திய அணியின் வெற்றிக் கேப்டன் தோனி. இரண்டு உலக கோப்பை பெற்றுத் தந்த இவர், திடீரென சரிவை சந்தித்தார். பிரிமியர் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக உள்ள இவர், சூதாட்ட சர்ச்சையில் சிக்கினார். 

சமீபத்தில் நடந்த ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் இந்திய அணி, பைனலில் தோற்று, சாம்பியன் வாய்ப்பை இழந்தது. இது போன்ற விஷயங்கள் தோனியின் மவுசை துளி அளவும் குறைக்கவில்லை.

கடந்த ஆண்டு ஒரு பொருளுக்கு விளம்பர ‘மாடலாக’ தோன்ற ரூ. 8 கோடி பெற்றார். இந்த நேரத்தில் ‘அடிடாஸ்’ நிறுவனத்துடன் ரூ. 10 கோடிக்கு ஒப்பந்தம் செய்த கோஹ்லி, முதலிடத்துக்கு முந்தினார்.

தற்போது தோனியின் செல்வாக்கு மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த நான்கு மாதங்களில் இவரது வர்த்தக மதிப்பு 60 சதவீதம் உயர்ந்துள்ளது. முன்பு ரூ. 8 கோடி பெற்ற இவர், இப்போது ஒரு பொருளுக்கு ‘மாடலாக’ தோன்ற ரூ. 13 கோடி சம்பளமாக பெறுகிறார். 

இதன் மூலம் நாட்டின் ‘காஸ்ட்லியான’ கிரிக்கெட் வீரரானார். எக்சைட், பெப்சி, ஏர்செல், ரீபோக் உள்ளிட்ட 21 பொருட்களுக்கு ‘மாடலாக’ உள்ளார். விளம்பரங்களில் தோன்ற அதிக தொகை பெறுபவர்கள் வரிசையில் பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு(ஒரு பொருளுக்கு ரூ. 15 கோடி) அடுத்த இடத்தில் உள்ளார்.

இது குறித்து கொலாஜ் ஸ்போர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் லத்திகா கனேஜா கூறுகையில்,‘‘தொடர்ந்து நிலையான ஆட்டத்தை தோனி வெளிப்படுத்தி வருகிறார். இந்திய ரசிகர்கள் எதையும் எளிதில் மறந்து விடுவதும் இவருக்கு சாதகம்,’’என்றார்.

ஆஸ்திரேலிய விளம்பர நிறுவன பிரதிநிதி ஒருவர் கூறுகையில்,‘‘கிரிக்கெட் களத்தில் கடினமாக உழைக்கக்கூடியவர் தோனி. மூன்றுவிதமான போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டனாக உள்ளார். 

பிரிமியர் தொடரில் சென்னை அணியை வழிநடத்துகிறார். புதுமையான ‘ஸ்டைலில்’ விளையாடுவதால், இவரை விளம்பர நிறுவனங்கள் மொய்க்கின்றன,’’என்றார்.

தோனியை கடந்த 2010ல் மூன்று ஆண்டுகளுக்கு ரூ. 210 கோடிக்கு ஒப்பந்தம் செய்த ரிதி ஸ்போர்ட்ஸ் நிறுவன தலைவர் அருண் பாண்டே கூறுகையில்,‘‘தோனியை சமீபத்தில் 6 முதல் 8 நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்தன. இவரது செல்வாக்கு தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது,’’என்றார்.

0 comments:

Post a Comment