மும்பை அணியை வாங்குகிறார் சச்சின்

கொச்சி கால்பந்து அணியை வாங்கிய கிரிக்கெட் வீரர் சச்சின், தற்போது சர்வதேச டென்னிஸ் பிரிமியர் லீக் தொடரில், மும்பை அணியை வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.        
         
ஐ.பி.எல்., ‘டுவென்டி–20’ கிரிக்கெட் வந்த பின், பல விளையாட்டுகள் இந்த பாணியில் களமிறங்கி விட்டன. ஹாக்கி, பாட்மின்டன், குத்துச்சண்டை, கோல்ப் வரிசையில் கால்பந்தும், டென்னிசும் இணைந்தன. 
            
இதில், எட்டு அணிகள் பங்கேற்கும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.,) தொடர் வரும் செப்டம்பர்–நவம்பரில் நடக்க உள்ளது. இத்தொடருக்கு, இந்திய கால்பந்து கூட்டமைப்பு(ஏ.ஐ.ஐ.எப்.,) அங்கீகாரம் அளித்தது.         
            
இத்தொடரில் பங்கேற்கும் கொச்சி அணியை பி.வி.பி., வென்ச்சர்ஸ் மற்றும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் இணைந்து வாங்கினர். இப்போது, மகேஷ் பூபதி துவங்கவுள்ள சர்வதேச டென்னிஸ் லீக் தொடரிலும் கால்பதிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வரும் நவ., 28 முதல் டிச., 13 வரை நடக்கும் இத்தொடரில் மும்பை, துபாய், சிங்கப்பூர் மற்றும் பாங்காக் என, நான்கு அணிகள் பங்கேற்கின்றன.     
  
இந்தியா சார்பிலான மும்பை அணியில் உலகின் ‘நம்பர்–1’ வீரர் ஸ்பெயினின் நடால், இந்தியாவின் சானியா மிர்சா, பீட் சாம்ப்ராஸ் (அமெரிக்கா), இவானோவிச் (செர்பியா) உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.       

நேற்று முன்தினம் கொச்சி கால்பந்து அணியை வாங்கிய பி.வி.பி., வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்த மும்பை டென்னிஸ் அணியையும் வாங்குகிறது.       

இந்நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின், டென்னிஸ் அணியையும் விரைவில் வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.       
இதுகுறித்து பி.வி.பி., வென்ச்சர்ஸ் தலைவர் பிரசாத் பொட்லுரி கூறுகையில்,‘‘ கடந்த சில ஆண்டுகளாக விளையாட்டு வணிகத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். 

இந்த வரிசையில் இந்தியன் பாட்மின்டன் லீக் தொடரில் ஐதராபாத் அணி, சர்வதேச டென்னிஸ் லீக் தொடரில் மும்பை அணி, மற்றும் கால்பந்து தொடரில் கொச்சி அணிகளில் முதலீடு செய்கிறோம். இதில் சச்சின் போன்ற ஜாம்பவான்கள் எங்களோடு இணைந்தது மிகவும் சிறப்பானது,’’ என்றார்.

0 comments:

Post a Comment