சர்ச்சையை கடந்து சாதிப்போம் - ரெய்னா நம்பிக்கை

சூதாட்டம் தொடர்பான சர்ச்சைகள், சென்னை அணிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது,’’ என, ரெய்னா தெரிவித்தார்.

ஆறாவது பிரிமியர் லீக் தொடரில் வெடித்த சூதாட்ட சர்ச்சையில் சென்னை அணியின் சீனிவாசன், அவரது மருமகன் குருநாத் மெய்யப்பன் சிக்கினர். 

இது தொடர்பாக விசாரித்த நீதிபதி முத்கல் கமிட்டியிடம் சென்னை அணி கேப்டன் தோனி தவறான வாக்குமூலம் அளித்தததாக இன்னொரு சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில், ஏழாவது பிரிமியர் லீக் தொடர் வரும் ஏப்., 16ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) துவங்குகிறது.

இதுகுறித்து சென்னை அணியின் ரெய்னா கூறியது: ஏழாவது பிரிமியர் லீக் தொடருக்கு சில புதிய வீரர்கள் எங்கள் அணியில் இணைந்துள்ளனர். பிரண்டன் மெக்கலம், டுவைன் ஸ்மித் உள்ளிட்டோரின் புதிய வரவால் பேட்டிங்கின் பலம் அதிகரித்துள்ளது. 

கேப்டன் தோனி அணிக்கு கூடுதல் வலு சேர்க்கிறார். இதேபோல வெஸ்ட் இண்டீசின் சாமுவேல் பத்ரி, சுழற்பந்துவீச்சின் பலத்தை அதிகரித்துள்ளார்.

சூதாட்ட சர்ச்சைகள் குறித்த செய்திகள் எங்கள் அணிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. தற்போது எங்கள் கவனம் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றி தேடித் தருவதில் மட்டுமே உள்ளது.

கடந்த ஆறு தொடர்களில் சென்னை அணிக்காக விளையாடும் வாய்ப்பை வழங்கிய கடவுளுக்கும், அணி நிர்வாகத்தினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) ஆடுகளங்கள் குறித்து எவ்வித நெருக்கடியும் இல்லை. 2006ல் அபுதாபியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடிய அனுபவம் எனக்கு உண்டு.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், முன்னாள் இந்திய அணி கேப்டன் கங்குலியுடன் போனில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது என்னை பாராட்டிய அவர், பேட்டிங் குறித்து நிறைய ஆலோசனைகள் வழங்கினார். பிரிமியர் லீக் தொடரில் முழுத்திறமையை வெளிப்படுத்துவேன்.

இவ்வாறு ரெய்னா கூறினார்.

0 comments:

Post a Comment