
டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில், இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் முதன் முறையாக அரையிறுதியில் மோதவுள்ளன.
இதில் சாதிக்கப் போவது அமித் மிஸ்ரா அடங்கிய இந்திய ‘சுழல்’கூட்டணியா அல்லது ஸ்டைனின் புயல் வேகப்பந்துவீச்சா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐந்தாவது ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் பங்கேற்ற 16 அணிகளில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட மொத்தம் 12 அணிகள் வெளியேறிவிட்டன.
இந்தியா, இலங்கை உள்ளிட்ட நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதில் ஏப்., 4ல் நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை சந்திக்கிறது.
முதல் அணி:
கடந்த 2007ல் கோப்பை வென்ற பின் இந்திய அணி, அடுத்த மூன்று தொடர்களில் ஒருமுறை கூட ‘சூப்பர்–8’ சுற்றினை தாண்டவில்லை. 7 ஆண்டுக்குப் பின் இம்முறை, முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
தொடர் துவங்கும் முன், ‘இந்திய அணியின் பவுலிங் திறனை பார்க்கும் போது, இம்முறையும் அரையிறுதிக்கு செல்வது கடினம் தான்,’ என, விமர்சனங்கள் இருந்தன.
‘சுழல்’ கூட்டணி:
கடைசியில் அத்தனை கருத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கி ஜோராக வெற்றி நடை போடுகிறது அமித் மிஸ்ரா (9 விக்.,), அஷ்வின் (7), ரவிந்திர ஜடேஜாவின் (5) ‘சுழல்’ கூட்டணி.
இதுவரை நடந்த நான்கு லீக் போட்டிகளில் இவர்கள் மொத்தம் 21 விக்கெட் சாய்த்து, இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். இது தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான அரையிறுதியிலும் தொடரும் என நம்பப்படுகிறது.
வெற்றி அதிகம்:
ஏனெனில், வழக்கமாக சுழற்பந்து வீச்சில் இந்த அணி திணறும். இதற்கு முன் நடந்த நான்கு உலக கோப்பை தொடர்களில் இரு அணிகளும், மோதிய 4 போட்டிகளில் இந்தியா 3ல் வென்றுள்ளது.
ஸ்டைன் மிரட்டல்:
அதேநேரம், தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான சமீபத்திய போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதற்கு ‘புயல்’ வேகப்பந்துவீச்சாளர் ஸ்டைன் முக்கிய காரணம்.
இவர், ‘டுவென்டி–20’ உலக கோப்பை அரங்கில் இதுவரை பங்கேற்ற 20 போட்டிகளில் 29 விக்கெட் சாய்த்துள்ளார். இம்முறையும் 9 விக்கெட் (4 போட்டி) வீழ்த்தியுள்ளார்.
0 comments:
Post a Comment