வருத்தத்தில் சச்சின் - ஜான் ரைட்

ஏழாவது ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணி தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை சந்தித்த வருத்தத்தில் சச்சின் உள்ளார்,’’என,  பயிற்சியாளர் ஜான் ரைட் தெரிவித்தார்.

ஏழாவது ஐ.பி.எல்., தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி விளையாடுகிறது. கடந்த தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய டுவைன் ஸ்மித் (சென்னை), மேக்ஸ்வெல் (பஞ்சாப்), மிட்சல் ஜான்சன் (பஞ்சாப்), தினேஷ் கார்த்திக் (டில்லி) வேறு அணிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர். 

கடந்த ஆண்டு ஐ.பி.எல்., தொடரில் இருந்து ஓய்வை அறிவித்த முன்னாள் இந்திய அணியின் ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சினுக்கு நட்சத்திர அந்தஸ்து வழங்கிய மும்பை அணி நிர்வாகம், அணியின் ஆலோசகராக நியமித்தது. 

இம்முறை ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கிய மும்பை அணி, கோல்கட்டா, பெங்களூரு, சென்னை அணிகளிடம் அடுத்தடுத்து வீழ்ந்து, ‘ஹாட்ரிக்’ தோல்வியை பெற்றது.

இதுகுறித்து மும்பை அணியின் பயிற்சியாளர் ஜான் ரைட் கூறியது: இம்முறை மும்பை அணிக்காக சச்சின் விளையாட மாட்டார் என அனைவருக்கும் தெரியும். இருப்பினும், கடந்த மூன்று போட்டியில் வீரர்கள் மோசமாக விளையாடினர். இது, சச்சினுக்கு கவலை அளித்துள்ளது. 

இம்முறை பேட்டிங் சுத்தமாக எடுபடவில்லை. பவுலிங் சிறப்பாக இருந்த போதிலும், அவர்களுக்கு அதிக அளவு நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை. பேட்ஸ்மேன்கள் இமாலய இலக்கை நிர்ணயிக்காமல், பவுலர்களிடம் அதிகம் எதிர்பார்க்க கூடாது. 

இதற்கு விரைவில் தீர்வு காணப்படும். பேட்டிங்கில் நிறைய மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளோம். இதற்காக சில ‘ரிஸ்க்’ எடுக்க உள்ளோம்.

சென்னை அணிக்கு எதிராக ஹர்பஜன் சிங் சிறப்பாக பந்துவீசினார். இவரது கடைசி ஓவரில் மூன்று விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஒரு விக்கெட் மட்டும் கைப்பற்ற முடிந்தது.

கடந்த முறை விளையாடிய வீரர்கள், இம்முறை வேறு அணிகளில் விளையாடுவது அணி நிர்வாகத்தின் முடிவு. தற்போதுள்ள வீரர்களை தயார் படுத்தி, அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட வைக்க வேண்டும். விரைவில் மும்பை அணி எழுச்சி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு ஜான் ரைட் கூறினார்.

0 comments:

Post a Comment