சென்னை அணிக்கு தோனி நோ - கேப்டன் பதவிக்கு குட்பை

சூதாட்ட சர்ச்சை காரணமாக, சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகுகிறார். இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் பொறுப்பையும் உதற உள்ளார்.

கடந்த 2008ல் பிரிமியர் ‘டுவென்டி–20’ தொடர் துவங்கிய போது, சென்னை அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார். 

இவரது சிறப்பான தலைமையில் சென்னை அணி 2010, 2011ல் சாம்பியன் பட்டம் வென்றது. 2010ல் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்றியது. தொடர்ந்து சீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்தச் சூழலில் கடந்த பிரிமியர் தொடரில் வெடித்த சூதாட்ட சர்ச்சையில் சென்னை அணி வசமாக சிக்கியது. முத்கல் குழு அறிக்கையில் தோனி உட்பட 6 இந்திய வீரர்கள் பெயர்கள் இடம் பெற்றன.

இதுகுறித்த விசாரணையில், சென்னை அணி உரிமையாளர் தொடர்பாக தவறான தகவலை தோனி கொடுத்ததாக புதிய சர்ச்சை கிளம்பியது. இது பற்றி சுப்ரீம் கோர்ட்டில் விவாதிக்கப்பட, தனது ‘இமேஜ்’ பாதிக்கப்பட்டதாக தோனி கருதினார். 

இதையடுத்து, பி.சி.சி.ஐ., தலைவர் பதவியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட சீனிவாசனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட தோனி, இந்தியா சிமென்ட்ஸ்  துணைத் தலைவர் மற்றும் சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக விரும்புவதாக தெரிவித்துள்ளார். 

இது ஏற்கப்படவில்லை என்றாலும், இரு தரப்பிலும் தீவிர விவாதம் நடக்கிறது.

கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகுவது உறுதியானால், வரும் ஏப்., 16ல் துவங்கும் ஏழாவது பிரிமியர் தொடரில் சென்னை அணிக்கு பெரும் சிக்கல் ஏற்படும்.


பதிலளிக்க மறுப்பு

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பதவி விலகல் குறித்து தோனியிடம் கேட்கப்பட்டது. 

அப்போது கூறுகையில்,‘‘ இதுபோன்ற கேள்விளுக்கு பதிலளிக்கப் போவதில்லை. ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் குறித்து மட்டும் கேளுங்கள்,’’ என்றார்.


அடுத்து யார்

தோனி ஒருவேளை விலகினால், புதிய கேப்டனாக ரெய்னாவை நியமிக்க இயலாது. ஏனென்றால் இவரது பெயரும் முத்கல் அறிக்கையில் உள்ளது.  இதனால், தமிழக வீரர் அஷ்வின் அல்லது குஜராத்தை சேர்ந்த ரவிந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.


அணியில் நீடிப்பாரா

சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து மட்டும் விலக அனுமதி கேட்டுள்ளார் தோனி. இந்திய அணியின் கேப்டனாகவும் இருக்கும் இவர், சாதாரண வீரராக மற்றவரின் தலைமையில் விளையாடுவது கடினம். இதனால் சென்னை அணியில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

0 comments:

Post a Comment