அடுத்ததடுத்த தோல்விகள் அதிர்ச்சி அளிக்கவில்லை - கோஹ்லி



ஆசிய கோப்பை தொடரின் அடுத்ததடுத்த தோல்விகள் அதிர்ச்சி ஏற்படுத்தவில்லை,’’ என இந்திய கேப்டன் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் 12வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. 

இதில் தனது முதல் லீக் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்திய இந்திய அணி, இலங்கை, பாகிஸ்தான் என இரண்டு அணிகளுக்கு எதிராக தாக்குபிடிக்கமுடியாமல் தோல்வியை தழுவியது. தவிர, இத்தொடரின் பைனலுக்கான வாய்ப்பையும் கோட்டைவிட்டு வெளியேறியது.

இந்நிலையில் இந்தியாவின் இரட்டை தோல்வி அதிர்ச்சி அளிக்கவில்லை என இந்திய கேப்டன் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விராத் கோஹ்லி கூறியது:

பாகிஸ்தான் அணிக்கு எதிரான தோல்வி அதிர்ச்சி எதுவும் ஏற்படுத்தவில்லை. இந்திய வீரர்கள் போரடிய விதத்தை பார்த்து பெருமைப்படுகிறேன். போட்டியின் போது அதிக பனிப்பொழிவு இருந்தது. இது இந்திய வீரர்களின் வேலையை அதிகப்படுத்தியது. இதில் வெற்றி பெறுவது சாதாரண விஷயம் அல்ல. ஆனால் இந்திய வீரர்கள் வெற்றிக்கு கொடுத்த போராட்டத்தை யாரும் மறக்கமுடியாது.

தவிர, வலிமையான அணிக்கு எதிராக அனுபவம் இல்லாத வீரர்கள் சிறப்பாக பந்துவீசினர். குறிப்பாக அமித் மிஸ்ரா செயல்பாடு திருப்தி அளிக்கும் விதத்தில் இருந்தது. ‘டுவென்டி–20’ போட்டிளை போல எளிய முயற்சியில் 50 ஓவர் போட்டிகளில் வெற்றிபெற முடியாது.

குறைந்த ரன்கள் இலக்காக இருந்தால் அப்ரிதி, குல் விரைவாக ரன்கள் சேர்க்க முயற்சிப்பார்கள், அப்போது விக்கெட் கைப்பற்ற அதிக வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தோம். அது சிறந்த முறையில் கைகொடுத்தது. 

ஆனால் அஷ்வின் பந்தில் இரண்டு சிக்சர் அடித்த அப்ரிதி அணியை வெற்றி பெற செய்தார். பொதுவாக பனிப்பொழிவு இருக்கும் போது பவுலர்களை எந்த குறையும் சொல்லமுடியாது. 

ஆனால் பீல்டிங்கில் கிடைத்த சில அரிய வாய்ப்புகளை பயன்படுத்தியிருந்தால், இந்திய அணி வெற்றி பெற்றிருக்கலாம். போட்டியில் வெற்றி, தோல்வி என்பதை நாம் நிர்ணயிக்க முடியாது. 

அதனால் இந்த தோல்விகள் அதிர்ச்சி எதுவும் ஏற்படுத்தவில்லை. வெற்றிபெற இந்திய வீரர்கள் கடினமாக கடைசிவரை போராடிய  விதம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு விராத் கோஹ்லி கூறினார்.

0 comments:

Post a Comment