எதிர்ப்பின்றி சரணடைந்த இந்திய அணி

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் பெரிய அளவில், எவ்வித எதிர்ப்பும் இன்றி சரணடைந்தது வியப்பு தருகிறது,'' என, இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் கவாஸ்கர், ரவி சாஸ்திரி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட, டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. இதில் ஓவல் மைதானத்தில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் சச்சின், அமித் மிஸ்ரா இருவரும் துணிச்சலான போராட்டத்தை வெளிப்படுத்தி, "டிரா' செய்யப் போராடினர். இருப்பினும், மற்றவீரர்கள் ஏனோதானோ என்ற ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இன்னிங்ஸ் தோல்வியடைய நேரிட்டது.

இதுகுறித்து முன்னாள் வீரர்கள் கூறியது:
கவாஸ்கர்:

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முடிவு பெரும் ஏமாற்றம் தருகிறது. இரண்டு சிறந்த அணிகள் பங்கேற்ற நிலையில், இத்தொடர் சிறப்பானதாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இந்திய வீரர்கள் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, எவ்வித எதிர்ப்பும் இன்றி சரணடைந்தனர்.

இது "நம்பர்-1' அணிக்கு அழகல்ல. தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அணிகள், பொதுவாக கடைசிவரை போராடி, சிறிய வித்தியாசத்தில் தான் தோற்கும். இப்படி மிகப்பெரிய அளவில் தோற்க மாட்டார்கள். ஒருவேளை இந்திய வீரர்களின் அணுகுமுறைகள் தவறாக இருந்திருக்கலாம்.

ரவி சாஸ்திரி:

இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய வீரர்களின் காயங்கள், "பார்ம்' இல்லாதது என, பல்வேறு காரணங்கள் <உள்ளன. ஆனால், இந்த தோல்வியிலிருந்து உடனடியாக விழித்துக் கொள்ள வேண்டும். இதற்காக கண்டிப்பான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' என, மூன்று வகையான போட்டிகளுக்கும் தனித்தனியாக குறிப்பிட்ட அளவு தரமான வீரர்களை எப்போதும் வைத்திருக்க வேண்டும். வீரர்களின் பழைய சாதனைகளை எப்போதும் பேசிக்கொண்டு, தேர்வு முடிவுக்கு வரக்கூடாது. இவற்றை சரியாக பின்பற்றினால் அடுத்த 6 முதல் 8 மாதங்களில் இந்திய அணி வெற்றிப் பாதைக்கு திரும்பலாம்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர்:

லட்சுமண் போன்றவர்கள் ஒரு திறமையை மட்டும் வைத்துக் கொண்டு, அணியில் காலம் தள்ள முடியாது. தென் ஆப்ரிக்காவில் ஸ்ரீசாந்த் செயல்பாட்டினை பார்த்தபின், ஜாகிர் கானுக்கு மாற்றாக நல்ல வீரரை கண்டறிய வேண்டும் என நினைத்தேன். இங்கிலாந்து தொடரில் ஸ்ரீசாந்துக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், மிகச் சாதாரணமான பவுலிங்கை வெளிப்படுத்தியது பெரும் ஏமாற்றமாக இருந்தது.

வெங்சர்க்கார்:

வெளிப்படையாக சொல்வதென்றால், இது இந்திய அணிக்கு கடினமான தொடர். சமீபகாலமாக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும், அஞ்சத்தக்க அணியுடன் தான் இந்தியா மோதியது. என்னைப் பொறுத்தவரையில் கடைசி சில இன்னிங்ஸ்களில் இந்திய வீரர்கள் சற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது ஆறுதலாக இருந்திருக்கும்.

பாபு நட்கர்னி:

இந்திய அணி இவ்வளவு மோசமாக விளையாடும் என்று நினைக்கவே இல்லை. நமக்குள்ள திறமையில் 5 சதவீதம் கூட வெளிப்படுத்தவில்லை. அடுத்தடுத்து தவறு செய்து கொண்டே தான் இருந்தனர். சில சீனியர் வீரர்களுக்கு உடல் ஒத்துழைத்தால், மனது தயாராக இல்லை. சிலநேரங்களில் மனது தயாராக இருந்தால், உடல் ஒத்துழைக்கவில்லை. மொத்தத்தில் இவர்கள் மனதளவில் பலகீனமாக இருந்தனர்.

பரூக் என்ஜினியர்:

இங்கிலாந்து அணி அதன் சொந்தமண்ணில் வலுவானது. இவர்களை இந்திய வீரர்கள் குறைத்து மதிப்பிட்டனர். இத்தொடருக்கு போதிய அளவில் தயாராகவில்லை. கூடுதலான பயிற்சி போட்டியில் பங்கேற்றிருக்க வேண்டும். அதிகளவில் சம்பளம் பெறும் பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றே தெரியவில்லை.

அருண் லால்:

இந்திய அணியில் இள ரத்தத்தை பாய்ச்ச வேண்டும். 35 அல்லது 38 வயதுள்ள வீரர்களை இன்னும் வைத்துக்கொண்டிருக்கக் கூடாது. இவர்களுக்கு பார்வைக் குறைபாடும் உள்ளது.

மனீந்தர் சிங்:

சச்சின், டிராவிட், லட்சுமண் ஆகியோரை எப்போதும் பெறமுடியாது. 19வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கு, டெஸ்ட் போட்டியின் மீதான ஆர்வத்தை, பி.சி.சி.ஐ., கொண்டு வர வேண்டும். இதன் மூலம் எதிர்கால வீரர்களை உருவாக்கலாம்

0 comments:

Post a Comment