இது போன்ற அணியை பார்த்ததில்லை - கங்குலி

இந்திய அணியின் பேட்டிங் இத்தொடரில் சிறப்பாக இல்லை. இங்கிலாந்து அணியிடம் "நம்பர்-1' இடத்தை ஒப்படைத்து விட்டனர். கடந்த பத்து ஆண்டுகளில் இதுபோன்ற இந்திய அணியை பார்த்ததில்லை,'' என, கங்குலி வருத்தம் தெரிவித்து உள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. டிராவிட் தவிர, மற்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பலான ஆட்டத்தை கொடுக்கின்றனர்.

பவுலர்கள் மட்டமாக செயல்படும் நிலையில், பீல்டிங் அதைவிட மோசம். இதனால் அடுத்தடுத்து "அடி' வாங்கி வருகிறது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறியது:

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியினர் சாதாரணமாக விளையாடுகின்றனர். மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, இங்கிலாந்து அணி 372 ரன்கள் குவித்தது. இது இந்தியாவுக்கு மோசமான நாள். இப்படி ஒரு இந்திய அணியை, பத்து ஆண்டுகளில் நான் பார்த்ததில்லை.


பயிற்சி இல்லை:

இதற்காக இந்திய வீரர்கள் டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆர்வமில்லாமல் உள்ளனர் என்பது தவறு. போதியளவு பயிற்சிகள் இல்லை என்பதே உண்மை. முக்கிய வீரர்கள் இந்தியாவில் இருந்து நேரடியாக இங்கிலாந்து வந்திருந்தனர்.

ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் உள்ளது போல, குறைந்தது இரண்டு பயிற்சி போட்டிகள் இருந்திருக்க வேண்டும். இங்கு, இந்திய அணி ஒரு பயிற்சி ஆட்டத்தில் மட்டுமே விளையாடி, டெஸ்டில் பங்கேற்றது.


மீண்டு வரும்:

இருப்பினும், இதிலிருந்து மீண்டு வரும் திறன் இந்தியாவுக்கு உண்டு. இத்தொடருடன் டிராவிட், சச்சின், லட்சுமண் ஆகியோருக்கு கிரிக்கெட் முடிந்து விடவில்லை. அடுத்து ஆஸ்திரேலிய தொடர் காத்திருக்கிறது.


மோசமான தொடர்:

சமீபத்தில் இந்திய அணி மோசமாக செயல்பட்ட முதல் தொடர் இது தான். சச்சின், டிராவிட் ஆகியோரிடம் மக்கள் அதிகம் எதிர்பார்த்தனர்.

பயிற்சியாளர் டங்கன் பிளட்சருக்கு இது சோதனைக் காலம். இந்திய அணியில் "சீனியர்கள்' அதிகம் இருப்பதால், அவர்களை கையாளுவதில் சிக்கல் இருக்கும் என்று தெரிகிறது. ஆனால் ஒருமுறை வெற்றி துவங்கி விட்டால், அப்புறம் அவருக்கு நல்ல நேரம் தான். ஏனெனில் இந்திய வீரர்கள் நல்ல பண்பாளர்கள்.

இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.

1 comments: