இலக்கு இல்லாத இந்திய அணி

டெஸ்ட் அரங்கில் "நம்பர்-1' இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான புதிய இலக்குகளை இந்திய அணி நிர்ணயித்துக் கொள்ளவில்லை. இதன் காரணமாகவே மிகப் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்டில் வரிசையாக தோல்வி அடைந்த இந்தியா, தொடரை இழந்ததோடு, டெஸ்ட் "ரேங்கிங்' பட்டியலில் முதலிடத்தையும் கோட்டை விட்டது. இங்கிலாந்து முதலிடத்துக்கு முன்னேறியது.


புள்ளிகள் குறைவு:

கடந்த 2009, டிச. 6ம் தேதி தோனி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் "ரேங்கிங்' பட்டியலில் முதல் முறையாக முதலிடம் பெற்றது. அடுத்த 20 மாதங்களில் தென் ஆப்ரிக்காவுடனான தொடரை "டிரா' செய்தது. சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான தொடர்களை வென்றது.

வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் மண்ணிலும் வெற்றிவாகை சூடியது. இந்த தொடர்களின் போது இந்திய வீரர்கள், போதும் என்ற மனநிறைவோடு காணப்பட்டனர். வெற்றி தாகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியது.

உதாரணமாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் 15 ஓவரில் 85 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலை காணப்பட்டது. கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்ததால், எளிதாக வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், தொடரில் 1-0 என்ற முன்னிலையில் இருந்ததால், போட்டியை வீணாக "டிரா' செய்தனர். இதனால் "ரேங்கிங்' பட்டியலில் வீணாக புள்ளிகளை இழந்தது.


திட்டம் இல்லை:

இந்திய அணியின் சரிவுக்கு சரியாக திட்டமிடாததும் முக்கிய காரணம். "நம்பர்-1' இடத்தை பெறுவதை காட்டிலும், அதனை தக்க வைப்பதே மிகவும் கடினம் என்பதை அறிந்து கொள்ள நம்மவர்கள் தவறினர். முதலிடத்தில் இருக்கிறோம் என்ற மிதப்பில் இருந்தனர். அடுத்து நாம் என்ன செய்யப் போகிறோம், எத்தனை வெற்றிகளை பெறப் போகிறோம் என புதிய இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளவில்லை.

தவிர, ஏதாவது ஒரு வீரரை தான் பெரிதும் சார்ந்து இருந்தது. இலங்கை, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடர்களை "டிரா' செய்ய லட்சுமண் காரணமாக இருந்தார். இவரது சிறப்பான ஆட்டம் அணிக்கு பெரிதும் கைகொடுத்தது.

இதே போல ஆஸ்திரேலியாவுடனான மொகாலி டெஸ்டில் கடைசி வரை பொறுப்பாக ஆடிய லட்சுமண், இஷாந்த் சர்மாவுடன் சேர்ந்து அணிக்கு "திரில்' வெற்றி தேடி தந்தார். இத்தகைய ஒரு வீரர் இங்கிலாந்து தொடரில் கிடைக்கவில்லை. டிராவிட் இரண்டு சதம் அடித்த போதும், அது அணியின் தோல்வியை தவிர்க்க உதவவில்லை.

இந்திய அணியில் கூட்டுமுயற்சியும் காணப்படவில்லை. நமது வீரர்கள் 80 முதல் 70 சதவீதம் வரை இந்திய மண்ணில் தான் விளையாடுகின்றனர். இதனால் தான் வெளிநாடுகளில் சோபிக்க முடியவில்லை என்கிறார் தோனி. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏனென்றால் ஹெடிங்லி, பெர்த், ஜமைக்கா போன்ற இடங்களில் இவரது தலைமையில் தான் இந்தியா வெற்றி பெற்றது. டிராவிட், சச்சின், லட்சுமண், ஜாகிர், போன்றவர்கள் ஓய்வு பெறும் பட்சத்தில் அவர்களுக்கு நிகரான மாற்று வீரர்கள் இல்லை.

இந்திய அணி இழந்த பெருமையை மீட்க, குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகள் தேவைப்படலாம். இந்த காலக்கட்டத்தில் புதிய இலக்குகளை நிர்ணயித்து, டெஸ்ட் அரங்கில் மீண்டும் எழுச்சி பெற தீவிரமாக முயற்சிக்க வேண்டும்.


பி.சி.சி.ஐ., அதிரடி

இந்திய அணியின் வீழ்ச்சி பற்றி மும்பையில் நேற்று நடந்த இந்திய கிரிக்கெட் போர்டின்(பி.சி.சி.ஐ.,)செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இப்பிரச்னைக்கு பி.சி.சி.ஐ., தலைவர் சஷான்க் மனோகர் மற்றும் செயலர் சீனிவாசன் இணைந்து நல்ல தீர்வு காண்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,""இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி பற்றி நிர்வாகிகள் கவலை வெளியிட்டனர். பி.சி.சி.ஐ., தலைவர் மற்றும் செயலரிடம் உரிய தீர்வு காணும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஓய்வு பெற்று 10 ஆண்டுகளுக்கு பதிலாக 5 ஆண்டுகளில் முன்னாள் வீரர்கள் தேசிய தேர்வுக்குழு உறுப்பினராக முடியும் என விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது,''என்றார்.

0 comments:

Post a Comment