இலங்கை அணிக்கு நம்பர் 1 வாய்ப்பு

ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், இலங்கை அணி முதன்முறையாக "நம்பர்-1' இடம் பிடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் வெளியிடப்படும் ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், தற்போது 130 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது.

இலங்கை (118 புள்ளி), இந்தியா (117 புள்ளி), தென் ஆப்ரிக்கா (116 புள்ளி), இங்கிலாந்து (106 புள்ளி) உள்ளிட்ட அணிகள் "டாப்-5' வரிசையில் உள்ளன. இப்பட்டியலில், முதலிடம் பிடிக்கும் வாய்ப்பு இலங்கை அணிக்கு ஏற்பட்டுள்ளது.

இலங்கை சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி, பல்லேகெலே மைதானத்தில் இன்று நடக்கிறது.

இத்தொடரை இலங்கை அணி 4-1 எனக் கைப்பற்றும் பட்சத்தில், 125 புள்ளிகளுடன் முதல் முறையாக "நம்பர்-1' இடத்தை அடையலாம்.

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 124 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்படும். இப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி, கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இலங்கை அணி 5-0 எனக் கைப்பற்றும் பட்சத்தில், 129 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறும். ஆஸ்திரேலிய அணி 121 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்படும்.

ஒருவேளை ஆஸ்திரேலிய அணி, 4-1 எனக் கைப்பற்றும் பட்சத்தில் 133 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கும். இலங்கை அணி 115 புள்ளிகளுடன் நான்காவது இடத்துக்கு தள்ளப்படும். ஆஸ்திரேலிய அணி 5-0 என கைப்பற்றும் பட்சத்தில், 136 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கும். இலங்கை அணி 112 புள்ளிகளுடன் நான்காவது இடத்துக்கு தள்ளப்படும்.

0 comments:

Post a Comment