இந்தியா இன்னிங்ஸ் தோல்வி: முதலிடத்தை இழந்தது

பிர்மிங்ஹாமில் நடந்த 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனையடுத்து இந்திய அணி டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்தை இழந்தது.

இங்கிலாந்து சென்ற இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான 4 டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்தது. பர்மிங்ஹாமில் 3வது டெஸ்ட் போட்டி நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது.

இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி சார்பில் கேப்டன் தோனி அதிகபட்சமாக 77 ரன்கள் எடுத்தார். காம்பீர் 38 ரன்களுக்கும், டிராவிட் 22 ரன்களுக்கும், லஷ்மன் 30 ரன்களுக்கும், பிரவீண் குமார் 26 ரன்களுக்கும்அவுட்டாயினர்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டானார்கள். இங்கிலாந்து தரப்பில் பிராட், பிரஸ்னன் ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர். இதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் அதிரடியா விளையாடி 7 விக்கெட் இழப்பிற்கு 710 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணியின் குக் அபாராமாக விளையாடி 294 ரன்களை குவித்தார்.

மோர்கன் 104 ரன்களுக்கும், ஸ்டிராஸ் 87 ரன்களுக்கும், பீட்டர்சன் 63 ரன்களுக்கும், பிரையர் 53 ரன்களுக்கும் அவுட்டாயினர். இதனையடுத்து இங்கிலாந்து அணி 486 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

சேவக் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் 4ம் நாள் ஆட்டத்தை துவக்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்தது. முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாயினர்.

காம்பீர் 14 ரன்களுக்கும், டிராவிட் 18 ரன்களுக்கும், லஷ்மண் 2 ரன்களுக்கும், ரெய்னா 10 ரன்களுக்கும் அவுட்டாயினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர், இந்தியா 89 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 40 ரன்களுக்கு ரன் அவுட்டானார். அமீத் மிஸ்ரா 22 ரன்களுக்கும், பிரவீண் குமார் 40 ரன்களுக்கும், இஷாந்த் சர்மா ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டாயினர்.

இந்திய அணி சார்பில் கேப்டன் தோனி மட்டும் சிறப்பாக விளையாடி 74 ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதியில் இந்திய அணி244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதன் மூலம் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேலும் இந்திய அணி டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்தை இழந்தது. தோனி தலைமையில் இந்திய அணியின் முதல் டெஸ்ட் தொடர் தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.

1 comments: