பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்தியது இந்தியா

ஆசிய விளையாட்டு ஹாக்கியில் பாகிஸ்தானை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி, அரையிறுதிக்கு முன்னேறியது.

சீனாவின் குவாங்சு நகரில் ஆசிய விளையாட்டு போட்டி நடக்கிறது. இதில் ஆண்கள் ஹாக்கி "பி' பிரிவில் இன்று நடந்த முக்கிய லீக் போட்டியில், இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இதற்கு முன் இந்த ஆண்டு நடந்த அஸ்லான்ஷா (4-2), உலக கோப்பை (4-1) மற்றும் காமன்வெல்த் போட்டி (7-4) என வரிசையாக மூன்று தொடர்களில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது.

இம்முறை ஆசிய விளையாட்டில் இந்திய அணி, ஹாங்காங்கை 7-0 என்றும், வங்கதேசத்தை 9-0 என்ற கோல் கணக்கிலும் பந்தாடியது. இதே அசத்தல் இன்று பாகிஸ்தானுக்கு எதிராகவும் தொடர்ந்தது.

போட்டி துவங்கிய சில நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் கிடைத்தது. இதை பெனால்டி கார்னர் "ஸ்பெஷலிஸ்ட்' சந்தீப் சிங், கோலாக மாற்றினார். ஆனால் அடுத்த சில நிமிடத்தில் பாகிஸ்தான் அணியின் ரேகன் பட், பீல்டு கோல் அடித்து பதிலடி தந்தார்.

பின் இந்தியாவுக்கு தரம் வீர் (16 வது நிமிடம்) மற்றொரு கோல் அடிக்க முதல் பாதியில் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் பாகிஸ்தானின் அபாசி ஒரு கோல் அடிக்க ஸ்கோர் 2-2 என சமன் ஆனது. பின் 47வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை, சந்தீப் சிங் மீண்டும் கோலாக மாற்றி அசத்தினார்.

இறுதியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து "பி' பிரிவில் இருந்து இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

0 comments:

Post a Comment