சச்சின் ரகசியம்

கடந்த 21 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறார் சச்சின். இதன் ரகசியம் பற்றி அறிய ஆர்வமாக இருக்கிறேன்,'' என, வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சிறந்த வில்வித்தை நட்சத்திரம் தீபிகா குமாரி. சமீபத்திய காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார். அடுத்து, சீனாவின் குவாங்சு நகரில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டிலும்(நவ. 12-27) தங்கப்பதக்கம் வெல்ல காத்திருக்கிறார்.

இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள இவர், இந்திய அணியின் சாதனை நாயகன் சச்சின் குறித்து வியப்பு தெரிவிக்கிறார். மிக நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடி வருவதன் ரகசியம் பற்றி, அவருடன் பேச விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தீபிகா கூறியது:

நான் சிறுவயதில் இருந்தே சச்சினின் ரசிகை. எனது "ரோல் மாடலாக' அவரை தான் கருதுகிறேன். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். இவ்வளவு நீண்ட காலம் விளையாடுவதன் ரகசியம் பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன். கிரிக்கெட்டை போல, வில்வித்தையில் சாதிக்கவும் அதிக கவனம் தேவை.

மிகுந்த ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும். இது தொடர்பாக சச்சின் எனக்கு வழிகாட்ட வேண்டும். அவரிடம் இருந்து நிறைய ஆலோசனைகள் பெற விரும்புகிறேன். அவரை சந்தித்து மிக நீண்ட நேரம் பேச ஆசைப்படுகிறேன்.

ஆசிய விளையாட்டில் தங்கம் வெல்ல கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். ஆனாலும், சீனாவின் தட்பவெப்பத்திற்கு ஏற்ப பக்குவப்படுத்திக் கொள்ள போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை. இது எனது செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இவ்வாறு தீபிகா குமாரி கூறினார்.

0 comments:

Post a Comment