அதலபாதாளத்தில் இந்திய பவுலர்கள்



ஒருநாள் போட்டிகளில் இந்திய பவுலர்களின் செயல்பாடு படுமோசமாக உள்ளது. சமீபத்திய 20 போட்டிகளில் 250 அல்லது அதற்கு மேலான ரன்களை வாரி வழங்கியுள்ளனர்.

கடந்த 2011ல் நடந்த உலக கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. தொடர்ந்து  சொந்தமண்ணில் நடந்த இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 ஒருநாள் தொடர்களை கைப்பற்றியது.

அதேநேரம், அன்னிய மண்ணில் பங்கேற்ற இரு நாடுகளுக்கு இடையிலான தொடரில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகளிடம் தோற்றது, இலங்கை மற்றும் பலம் குறைந்த வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகளை மட்டும் வென்றது.

இதற்கு இந்திய அணியின் பலவீனமான பந்துவீச்சு முக்கிய காரணம். கடந்த ஜன. 1, 2013 முதல் இந்திய அணி பங்கேற்ற போட்டிகளில், 20ல் 250 அல்லது அதற்கு மேல் என, ரன்களை விட்டுக் கொடுத்தது. 

இதில் 11 போட்டிகளில் எதிரணியினர் 300 அல்லது அதற்கும் மேல் ரன்களை எடுத்துள்ளனர். இதனால், பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்படுகிறது. சமீபத்திய நியூசிலாந்து தொடரில் முதல் மூன்று போட்டியிலும், சராசரியாக 300க்கும் மேற்பட்ட ரன்களை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அணியின் முன்னணி பவுலர்கள் நிலை பரிதாபமாக உள்ளது. கடந்த ஐந்து போட்டிகளில் புவனேஷ்வர் குமார், 3 விக்கெட்டுகள் தான் வீழ்த்தினார்.

அணியின் தற்போதைய ‘சீனியர்’ இஷாந்த் சர்மா, கடந்த இரு போட்டிகளில் 2 விக்கெட் கைப்பற்றினார். முகமது ஷமி மட்டும் இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலாக உள்ளார். இவர் கடந்த நான்கு போட்டிகளில் 10 விக்கெட் சாய்த்துள்ளார்.ஆனாலும் ரன்களை கட்டுப்படுத்த தவறினார்.

சுழற்பந்துவீச்சும் தேறவில்லை. அணியின் முன்னணி வீரர் அஷ்வின், நான்கு போட்டிகளில் ஒரு விக்கெட் தான் கைப்பற்றினார். ரவிந்திர ஜடேஜா (4) சற்று பரவாயில்லை.

0 comments:

Post a Comment