சிக்கல் சென்னை - பிரிமியர் சூதாட்டத்தில் திருப்பம்



பிரிமியர் கிரிக்கெட் சூதாட்டம் குறித்த மூன்று நீதிபதிகள் கொண்ட விசாரணைக் குழு, பிப்., 10ல் அறிக்கையை தாக்கல் செய்கிறது. இதில், ‘சென்னை அணியை தடை செய்ய வேண்டும்,’ என, பரிந்துரைக்க இருப்பதாக தெரிகிறது.

ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் நடந்த சூதாட்டம் தொடர்பாக, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் சீனிவாசன் மருமகன் குருநாத் மெய்யப்பன் சிக்கினார். இதுகுறித்து விசாரிக்க, பி.சி.சி.ஐ., சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் பாலசுப்ரமணியன், ஜெயராம் சவுதா என, இரு நபர் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவின் அறிக்கை செல்லாது என, மும்பை ஐகோர்ட் தெரிவித்தது. இதை எதிர்த்து பி.சி.சி.ஐ., சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. அப்போது பி.சி.சி.ஐ., முடிவை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட், மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை தனியாக அக்., 7ல் அமைத்தது.

அரியானா ஐகோர்ட் தலைமை நீதிபதி முகுல் முத்கல் தலைமையிலான இதில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நாகேஷ்வர் ராவ் மற்றும் அசாம் கிரிக்கெட் சங்க உறுப்பினர் நிலே தத்தா இடம் பெற்றனர்.

மும்பை கிரைம் பிராஞ்ச் அதிகாரி ஹிமான்சு ராய், மெய்யப்பனுக்கு எதிரான ஆதாரங்களை, இக்குழுவிடம் நவ., 7ல் சமர்ப்பித்தார். பி.சி.சி.ஐ., ஊழல் தடுப்பு அதிகாரி ரவி சவானி, சண்டிலா, பத்திரிகையாளர்கள் சீனிவாசனுக்கு எதிரான பிரிமியர் கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் லலித் மோடியின் வக்கீல் மெக்மூத் அப்டி, முத்கல் குழுவில் நேரில் ஆஜராகினார். இன்று, பி.சி.சி.ஐ., அனுமதியற்ற பீகார் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஆதித்ய வர்மாவை சந்திக்கிறது.

பிப்., 10ல் அறிக்கையை முத்கல் குழு சுப்ரீம் கோர்ட்டில் சமர்பிக்கிறது. இதில் சென்னை அணி உரிமையை தடை செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.


மீண்டும் சிக்கல்:

பிப்., 12ல் ஏழாவது பிரிமியர் தொடருக்கான வீரர்கள் ஏலம், நடக்கவுள்ளது. அறிக்கை, ஒருவேளை சென்னைக்கு பாதகமாக இருக்கும் என்றால், அது தோனியின் சென்னை அணிக்கு மட்டுமன்றி, பிரிமியர் தொடரின் நன்மதிப்புக்கு களங்கமாக அமையும்.

‘விசாரணை ஒரு கண்துடைப்பாக இருக்காது. பி.சி.சி.ஐ., தலைவர், சென்னை அணி உரிமையாளர் சீனிவாசனுக்கு சாதகமாக இருக்காது,’ என, ஏற்கனவே நீதிபதி முத்கல் தெரிவித்திருந்தார்.

தெரிவிக்க முடியாது:

நீதிபதி முத்கல் கூறியது:
விசாரணைக்கு எங்களுக்கு நான்கு மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. இப்போது பிப்., 10ல் அறிக்கை தாக்கல் செய்யப் போகிறோம்.

பெட்டிங்கை சட்டப்பூர்வமாக மாற்ற வேண்டும் என்பது குறித்து, பிப்., 10க்குப் பின் பேசலாம்.

இவ்வாறு நீதிபதி முத்கல் கூறினார்.

0 comments:

Post a Comment