ஜாகிர் கானை தேர்வு செய்யலாமா?

இந்திய அணிக்கு மீண்டும் ஜாகிர் கானை தேர்வு செய்ய முயற்சிகள் நடக்கின்றன.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான், 35. கடந்த ஆண்டு கோல்கட்டாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குப் பின் இந்திய அணியில் இருந்து போதிய உடற்தகுதி இல்லாதது, மோசமான "பார்ம்' காரணமாக நீக்கப்பட்டார். 

பிரான்ஸ் பயிற்சியாளர் டிம் எக்செட்டரிடம் சென்று, கடுமையான முயற்சிக்குப் பின், மீண்டு வந்தார். வெஸ்ட் இண்டீஸ் "ஏ' அணிக்கு எதிரான மூன்றாவது நான்கு நாள் போட்டியில் சிறப்பான பவுலிங் காரணமாக, இந்திய "ஏ' அணிக்கு வெற்றி தேடித்தந்தார். 

மும்பை அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட இவர், வரும் 27-30ல் அரியானா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் பங்கேற்கிறார். இதனிடையே, இந்திய ஒருநாள் அணியில் இடம் பெற்றுள்ள "சீனியர்' இஷாந்த் சர்மா, சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இவரை ஆஸ்திரேலிய தொடரில் மாற்றப் போவதில்லை எனத் தெரிகிறது. இருப்பினும், வரும் நவ., 2ல் துவங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில், அனுபவ ஜாகிர் கானை மீண்டும் தேர்வு செய்யும் திட்டம், இந்திய கிரிக்கெட் போர்டிடம் இருப்பதாக தெரிகிறது. 

இதற்கேற்ப, ஜாகிர் கான் விளையாடும் போட்டியை, நேரில் பார்க்க, பி.சி.சி.ஐ., தேர்வுக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,"" ஜாகிர் கான் திறமையில் எங்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. 

இவரது உடற்தகுதி எப்படி உள்ளது என்று தான் பார்க்க வேண்டும். இதற்காக, இந்திய அணி தேர்வுக்குழுவில் இருந்து ஒருவர், இவரது செயல்பாட்டினை நேரில் பார்க்கவுள்ளார். 

இப்போதைய நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, நமது வேகப்பந்து வீச்சாளர்களின் செயல்பாட்டினை பார்க்கும் போது, ஜாகிர் கான் நன்றாக இருப்பார் எனத் தெரிகிறது,'' என்றார்.

0 comments:

Post a Comment