சகாரா விவகாரம்: சமரச தீர்வு

பி.சி.சி.ஐ., மற்றும் சகாரா நிறுவனம் இடையிலான பிரச்னைக்கு சமரச தீர்வு எட்டப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பான இறுதி முடிவு இன்று நடக்கும் பி.சி.சி.ஐ., செயற்குழுவில் எடுக்கப்பட உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் "ஸ்பான்சராக' 11 ஆண்டுகளாக சகாரா நிறுவனம் உள்ளது. ஐ.பி.எல்., "புனே வாரியர்ஸ்' அணியின் உரிமையாளராகவும் இருக்கிறது.

இந்நிலையில், புனே அணியின் கேப்டனாக இருந்த யுவராஜ் சிங், "கேன்சர்' பாதிப்பிற்காக சிகிச்சை பெற திடீரென அமெரிக்கா சென்றார். இவருக்குப் பதிலாக வேறு ஒரு வீரரை சேர்த்துக் கொள்ள இந்திய கிரிக்கெட் போர்டிடம்(பி.சி.சி.ஐ.,) சகாரா நிறுவனம் அனுமதி கேட்டது.

இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட, ஆத்திரமடைந்த சகாரா நிறுவனம் இந்திய அணியின் "ஸ்பான்சர்' நிலையில் இருந்து விலகியது.

இதனால், பி.சி.சி.ஐ.,க்கு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

இதனை தவிர்க்க, சமரச பேச்சுவார்த்தை நேற்று மும்பையில் நடந்தது. இதில், சகாரா தலைவர் சுப்ரதோ ராய், பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன், ஐ.பி.எல்., தலைவர் ராஜிவ் சுக்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், ஐ.பி.எல்., ஏலத்தில் தேர்வு செய்யப்படாத வீரர்களை சகாரா நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது.

இப்பேச்சுவார்த்தையின் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனாலும், சமரச தீர்வு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று சென்னையில் நடக்கும் பி.சி.சி.ஐ.,யின் செயற்குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

இது குறித்து பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,""சில விஷயங்களுக்கு செயற்குழுவின் ஒப்புதல் தேவைப்படுகிறது. இதனால் தான் பேச்சுவார்த்தையின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இன்று நடக்க உள்ள கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு, நல்ல முடிவு எடுக்கப்படும்,''என்றார்.

0 comments:

Post a Comment