ரோகித் சர்மாவால் புதிய குழப்பம்

ரோகித் சர்மா வரவால் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவருக்கு வாய்ப்பு அளித்தால், "டாப்-ஆர்டரில்' இருக்கும் சேவக், சச்சின் அல்லது காம்பிரை நீக்க வேண்டிய இக்கட்டான நிலை உருவாகியுள்ளது. இதன்படி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த போட்டியில் சச்சினுக்கு ஓய்வு அளிக்கப்படலாம்.

இந்திய அணியின் மிகச் சிறந்த "மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன் ரோகித் சர்மா. "சீனியர்' வீரர்கள் நிறைய பேர் இருப்பதால், நிரந்தர வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கிறார். சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.


சுழற்சி முறை:

தற்போதைய முத்தரப்பு தொடரில் இவரை விளையாடும் லெவனில் இடம் பெறச் செய்வதில் கேப்டன் தோனி உறுதியாக உள்ளார். இதையடுத்து "டாப்-ஆர்டரில்' சுழற்சி முறையில் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க திட்டமிட்டிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் சேவக் நீக்கப்பட்டு, ரோகித் இடம் பெற்றார். இலங்கையுடனான போட்டியில் காம்பிர் நீக்கப்பட்டு, மீண்டும் ரோகித் வாய்ப்பு பெற்றார். இவ்விரு போட்டிகளிலும் இவர் சோபிக்கவில்லை.

ஆனாலும், இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்க தோனி முடிவு செய்துள்ளார். இதையடுத்து அடிலெய்டில் வரும் 12ம் தேதி நடக்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சச்சின் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இது குறித்து தோனி கூறுகையில்,""ரோகித் சர்மா அதிக போட்டிகளில் விளையாட வேண்டும். அப்போது தான் சூழ்நிலைக்கு ஏற்ப பக்குவப்படுத்திக் கொள்ள முடியும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த போட்டியிலும் சுழற்சி முறையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுவர்,'' என்றார்.


கவாஸ்கர் எதிர்ப்பு:

தோனியின் இந்த முடிவுக்கு கவாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவர் கூறுகையில்,""ஒரு வீரர் சரியாக செயல்படவில்லை என்றால், அவரை தாராளமாக நீக்கலாம். மாறாக நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் வீரருக்கு சுழற்சி முறை என்ற பெயரில் ஓய்வு அளிக்கக் கூடாது. என்னை பொறுத்தவரை சச்சின், சேவக், காம்பிர் ஆகியோர் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும். ரோகித் சர்மா அல்லது ரெய்னாவை நீக்கலாம்,'' என்றார்.

கவாஸ்கர் கூறுவதை ஏற்கலாம். "மிடில்-ஆர்டரில்' விராத் கோஹ்லி, ரெய்னா, ரோகித் சர்மா ஆகிய 3 இளம் வீரர்கள் உள்ளனர். இதில் கோஹ்லி சிறப்பான "பார்மில்' இருப்பதால், அவருக்கு பிரச்னை இல்லை.

ரெய்னாவை எடுத்துக் கொண்டால் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த 22 போட்டிகளில் இரு அரைசதம் தான் அடித்துள்ளார். இதே காலக்கட்டத்தில் ரோகித் சர்மா 13 போட்டிகளில் 6 முறை அரைசதம் அடித்துள்ளார். உலக கோப்பைக்கு பின் ரெய்னாவின் சராசரி ரன் 44. ரோகித் சர்மா பங்கேற்ற இரு தொடர்களில், அவரது சராசரி 128, 76 என மிகவும் சிறப்பாக உள்ளது.

தவிர, ரெய்னாவின் "பவுன்சர்' பலவீனம் தொடர்கிறது. பெர்த்தில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் கூட "பவுன்சரை' தவறாக அடித்து தான் விக்கெட்டை பறிகொடுத்தார். செயல்பாட்டின் அடிப்படையில் பார்த்தால், ரெய்னாவைவிட ரோகித் முந்துகிறார்.


துணைக்கேப்டன் பிரச்னை

முத்தரப்பு தொடரில் "டாப்-ஆர்டரில்' சுழற்சி முறையில் வீரர்கள் தேர்வு இருக்கும் என்பதை அறிந்து தான், இந்திய அணியின் துணைக்கேப்டனாக யாரும் நியமிக்கப்படவில்லை என தெரிகிறது.

ஆஸ்திரேலியாவை எடுத்துக் கொண்டால், துணைக்கேப்டனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஸ்டீவ் வாக், கேப்டனாக இருந்த போது, பாண்டிங் துணைக்கேப்டனாக இருந்தார். பின் பாண்டிங் கேப்டனாக இருந்த போது, மைக்கேல் கிளார்க் துணைக்கேப்டனாக இருந்தார்.

பாண்டிங்கிடம் இருந்து அணியை வழிநடத்தும் நுணுக்கங்களை கற்ற கிளார்க், தற்போது கேப்டன் பதவியில் அசத்துகிறார். இதனை இந்திய கிரிக்கெட் போர்டு புரிந்து கொண்டால் நல்லது.

0 comments:

Post a Comment