சச்சின் மாளிகையை பார்க்கலாமா...

மும்பை செல்லும் அனைவரும், சச்சினின் புதிய சொகுசு மாளிகையை பார்க்க செல்கின்றனர். இதனால், சச்சினின் வீடு விரைவில் சுற்றுலா மையமாக மாறினாலும் ஆச்சரியம் இல்லை.

இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். இதுவரை 181 டெஸ்ட் ((14,965 ரன்கள்), 453 ஒருநாள் (18,111 ரன்கள்) போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், விரைவில் 100 வது சதம் அடிக்க காத்திருக்கிறார்.

இதனிடையே, மும்பையில் 5 மாடிகள் கொண்ட சொகுசு மாளிகையில் சச்சின் சமீபத்தில் குடியேறினார். விநாயர் கோயில், நீச்சல் குளம், "மினி-தியேட்டர்' உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இங்குள்ளன.

6 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், ரூ. 50 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த வீடு தான் இப்போது சுற்றுலா ரசிகர்கள் இலக்காக மாறியுள்ளது. மும்பை செல்லும் அனைவரும், புறநகர் பகுதியான பந்த்ராவில் உள்ள பெர்ரி கிராஸ் ரோடுக்கு செல்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். தங்களது சுற்றுலா அட்டவணையில், இந்த வீட்டினையும் சேர்த்துள்ளார்கள்.

நிரந்தர அனுமதி:

தவிர, நகரில் உள்ள அனைவரும், இந்த தீபாவளி விடுமுறையில் இதுவரை பத்திரிகைகளில் மட்டுமே பார்த்த சச்சினின் வீட்டினை, எப்படியும் நேரில் சென்று பார்த்துவிட முடிவு செய்துள்ளனராம். இதனால் அங்கு போக்குவரத்துக்கு பெரும் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய, போக்குவரத்து போலீசார், சச்சினின் வீட்டில் நிரந்தரமாக தங்க, அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அமிதாப் வீடு:

ஏற்கனவே மும்பையில் உள்ள பல்வேறு பாரம்பரிய தளங்கள், நினைவிடங்கள் வரிசையில் ஜல்சா பகுதியில் உள்ள, அமிதாப்பச்சன் வீடும் இப்படித்தான் முக்கிய சுற்றுலா தளமாகியுள்ளது.

இந்தியா முழுவதிலும் இருந்து மட்டுமன்றி, வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கூட, கடந்த 30 ஆண்டுகளாக, அமிதாப்பச்சன் வீட்டினையும் தாங்கள் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக வைத்துள்ளனர். இப்போது, சச்சின் வீடும் இந்த வரிசையில் சேர்ந்துள்ளது.

0 comments:

Post a Comment