அதிசயம் நிகழ்த்துமா சென்னை கிங்ஸ்

சாம்பியன்ஸ் லீக் தொடரில் இன்றைய முக்கிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், நியூ சவுத் வேல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில், சென்னை அணி நல்ல "ரன்ரேட்டில்' இமாலய வெற்றி பெற வேண்டும். பின் ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யலாம்.

மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. இன்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் "ஏ' பிரிவு கடைசி லீக் போட்டியில், "நடப்பு சாம்பியன்' சென்னை சூப்பர் கிங்ஸ், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் அணியை சந்திக்கிறது.


மோசமான துவக்கம்:

சென்னை அணிக்கு மைக்கேல் ஹசி, முரளி விஜய், ரெய்னா ஆகியோர் துவக்கத்தில் திணறுவது பின்னடைவை ஏற்படுத்துகிறது. இன்று இவர்கள் எழுச்சி பெற வேண்டும். கேப்டன் தோனி, பத்ரிநாத் தங்களது ஆமை வேக ஆட்டத்துக்கு விடைகொடுக்க வேண்டும். "ஆல்-ரவுண்டராக' டுவைன் பிராவோ அசத்துவது நம்பிக்கை தருகிறது.

கடந்த போட்டியில் பவுலிங்கில் கலக்கிய போலிஞ்சர் இன்றும் தனது விக்கெட் வேட்டையை தொடர்ந்தால் எதிரணிக்கு சிக்கல் ஏற்படும். இவரை தவிர அஷ்வின், மார்கல், ஜகாதி உள்ளிட்டோர் தங்களின் வலிமையை நிரூபிக்க வேண்டும்.


ஸ்மித் நம்பிக்கை:

நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு துவக்கத்தில் வாட்சன், வார்னர், டேனியல் ஸ்மித் ஆகியோர் கைகொடுக்கின்றனர். கேப்டன் சைமன் காடிச் "பார்மிற்கு' திரும்பினால் நல்லது. ஸ்டீபன் ஸ்மித்தின் அசத்தல் ஆட்டம் இன்றும் தொடரலாம்.

பவுலிங்கில் ஸ்டீவ் ஓ கபே, ஸ்டீபன் ஸ்மித், மிட்சல் ஸ்டார்க், கம்மின்ஸ் போன்றோர் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கலாம். ஹென்ரிக்ஸ் விக்கெட் வீழ்த்த முயற்சிக்க வேண்டும்.

சென்னையில் இன்று நடக்கும் மற்றொரு "ஏ' பிரிவு லீக் போட்டியில், டிரினிடாட் அண்டு டுபாகோ அணி, கேப் கோப்ராஸ் அணிகள் மோதுகின்றன.


வாய்ப்பு எப்படி?:

சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இம்முறை "ஏ' பிரிவு "குரூப் ஆப் டெத்' என அழைக்கப்பட்டது. இதற்கேற்ப அரையிறுதிக்கு முன்னேற அணிகள் இடையே கடும் போட்டி காணப்படுகிறது.

இன்று கேப் கோப்ராஸ் வெற்றி பெற்றால்(5 புள்ளிகளுடன்) நல்ல "ரன் ரேட்' இருப்தால், மும்பையை பின்னுக்கு தள்ளி அரையிறுதிக்கு முன்னேறும். இதே போல சென்னை அணியை, நியூ சவுத் வேல்ஸ் வென்றால் 6 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பை பெறும்.

மாறாக கோப்ராஸ், நியூ சவுத் வேல்ஸ் அணிகள் தோல்வி அடையும் பட்சத்தில் மும்பை அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். பின் நியூ சவுத் வேல்ஸ், சென்னை கிங்ஸ், டிரினிடாட் டுபாகோ ஆகிய 3 அணிகள் இடையே அரையிறுதிக்கு முன்னேறுவதில் போட்டி இருக்கும். இனை அனைத்து நான்கு புள்ளிகள் பெற்று இருக்கும். அப்போது "ரன் ரேட்' அடிப்படையில் வாய்ப்பு முடிவு செய்யப்படும்.

எனவே, இன்று சென்னை அணி முதலில் நல்ல "ரன் ரேட்டில்' வெற்றி பெற வேண்டும். அதற்கு பின் அதிர்ஷ்டம் அடித்தால், அரையிறுதி வாய்ப்பை பெறலாம்.

0 comments:

Post a Comment