ஐ.பி.எல்.லில் பாகிஸ்தான் வீரர்கள்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை சேர்ப்பது குறித்து வரும் 14-ம் தேதி நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.

2008-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்கள் பணம் கொழிக்கும் ஐபிஎல் போட்டியில் சேர்க்கப்படவில்லை.

இந்த நிலையில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலுடன் ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களிடம் சுக்லா கூறியது:

ஐபிஎல் போட்டியின் பாகிஸ்தானைச் சேர்ந்த நடுவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். சில அணிகளுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் பயிற்சியாளர்களாக உள்ளனர். இதேபோல் சில அணிகளின் அதிகாரிகளும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.

அப்படியிருக்கையில் ஒட்டுமொத்த பாகிஸ்தானுக்கும் ஐபிஎல் போட்டியில் தடை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறமுடியாது. எனவே யாருக்கு எதிராகவும் தடை என்ற கேள்விக்கே இடமில்லை.

பாகிஸ்தான் வீரர்களை ஐபிஎல் போட்டியில் சேர்ப்பது குறித்து ஆட்சி மன்றக் குழு கூட்டத்தின்போது விவாதிக்கப்படும். எனினும் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களிடமே உள்ளது. அவர்களை ஏலம் எடுப்பதா, வேண்டாமா என்பதை அணி உரிமையாளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

ஐபிஎல் போட்டியின் போது வீரர்கள் காயமடைவதால்தான் சர்வதேச அளவிலான போட்டிகளில் பாதிப்பு ஏற்படுகிறது என்று இட்டுக்கட்டி கூறப்படுகிறது.

ஐபிஎல் போட்டியின்போது வீரர்கள் காயத்தோடும், களைப்போடும் இருந்தாலும்கூட, அவர்களை விளையாடும்படி வற்புத்தப்படுவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. வீரர்களின் காயத்துக்கு ஐபிஎல் போட்டியை மட்டுமே குற்றம்சாட்ட முடியாது.

இந்தியா-இங்கிலாந்துத் தொடரில்தான் ஏராளமான வீரர்கள் காயமடைந்தனர். எனவே காயம் எப்படி வேண்டுமானாலும் ஏற்படலாம்.

0 comments:

Post a Comment