நடையை கட்டியது நடப்பு சாம்பியன்

சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில் இருந்து, "நடப்பு சாம்பியன்' சென்னை கிங்ஸ் வெளியேறியது. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில், 46 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக வீழ்ந்தது. வார்னர் அதிரடி சதம் கைகொடுக்க, வெற்றிபெற்ற நியூ சவுத் வேல்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் தொடரின் "ஏ' பிரிவு கடைசி லீக் போட்டி நேற்று சென்னையில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், நியூ சவுத்வேல்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற காடிச், பேட்டிங் தேர்வு செய்தார்.


நல்ல துவக்கம்:

நியூ சவுத்வேல்ஸ் அணிக்கு வாட்சன், வார்னர் இணைந்து நல்ல துவக்கம் தந்தனர். போலிஞ்சரின் முதல் ஓவரில் மூன்று பவுண்டரி விளாசினார் வாட்சன். இவர் 21 ரன்னுக்கு அவுட்டானார். பின் வார்னருடன், ஸ்மித் ஜோடி சேர்ந்தார்.


சூப்பர் ஜோடி:

ஸ்மித் ஒருபக்கம் நிதானமாக விளையாட, மறுபுறம் வார்னர் சென்னை அணியினரின் பவுலிங்கை உண்டு, இல்லை என்று துவம்சம் செய்தார். வார்னர் 38 ரன் எடுத்திருந்த போது, கொடுத்த "கேட்ச்' வாய்ப்பை, ஜகாதி கோட்டை விட்டார்.

கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட வார்னர், சிக்சர் மழை பொழிந்தார். ஜகாதி,
போலிஞ்சர், ரெய்னா, அஷ்வின் என, யாரையும் விட்டு வைக்கவில்லை.


வார்னர் சதம்:

இரண்டாவது விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்தநிலையில், ஸ்மித் (31) வெளியேறினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வார்னர், 58வது பந்தில் தனது 2வது "டுவென்டி-20' சதத்தை பதிவு செய்தார். பிராவோ வீசிய 19வது ஓவரில் மூன்று சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 24 ரன்கள் எடுக்கப்பட்டது.

20 ஓவரில் நியூ சவுத்வேல்ஸ் அணி 2 விக்கெட்டுக்கு 201 ரன்கள் குவித்தது.


ஹசி ஆறுதல்:

அரையிறுதிக்கு முன்னேற, 17 ஓவரில் 202 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி களமிறங்கியது. வழக்கம் போல் ஹசி, முரளி விஜய் துவக்கம் தந்தனர். கிளார்க்கின் முதல் ஓவரில் ஹசி, மூன்று பவுண்டரி விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்த நிலையில், அம்பயர் ஜோகனின் (தெ.ஆப்.,) தவறான தீர்ப்பில் ஹசி (37) அவுட்டானார்.

முரளி விஜய் (17) மீண்டும் ஏமாற்றினார். 14 பந்துகளில் 28 ரன்கள் விளாசிய ரெய்னா அவுட்டானதும், சென்னை அணியின் வெற்றி கனவு தகர்ந்தது. கரைசேர்ப்பார் என்று எதிர்பார்த்த கேப்டன் தோனி, 2 ரன்னுக்கு அவுட்டாகி வெறுப்பேற்றினார். பிராவோவும் (16) நிலைக்கவில்லை. சகா "டக்' அவுட்டானார்.

பத்ரிநாத் (13) இம்முறையும் சொதப்பினார். அஷ்வின் (1) நிலைக்கவில்லை. கடைசியில் குலசேகரா (18), போலிஞ்சர் (17) போராடிய போதும், வெற்றிக்கு உதவவில்லை.

சென்னை அணி 18.5 ஓவரில் 155 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. நியூ சவுத் வேல்ஸ் அணி 6 புள்ளியுடன், அரையிறுதிக்கு முன்னேறியது.

1 comments:

  1. விடுங்க சார் , இப்பவெல்லாம் யார் தான் விளையாட்டுக்காக உண்மையாக ஆடுகிறார்கள். எல்லாம் பண மயம்

    ReplyDelete